திங்கள், 28 ஜூலை, 2014

நடிகை ரோகினி : பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வு தேவை !

எண்ணம், பேச்சு, செயல் இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும் என்று திரைப்பட நடிகை ரோஹிணி கூறினார்.
திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற "வையத் தலைமை கொள்' என்ற தலைமைத்துவப் பயிற்சி முகாமில், "தையலை உயர்வு செய்' என்ற தலைப்பில் அவர் பேசியது:
"நீயும் நானும் சமம் என்ற உரிமைக்கான போராட்டம்தான் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு அறிவுரை வழங்கும் நாம், பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஆண்களுக்கு ஒருபோதும் அறிவுரை வழங்குவதில்லையே, ஏன்?ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்படும்போது அந்த ஆணால் ஒரு முறைதான் பாதிக்கப்படுகிறாள். ஆனால், தொடர்ந்து அவர் சாகும் வரையிலும் அதைச் சொல்லிக் குறிப்பிட்டு அடையாளப்படுத்துவது இந்தச் சமூகம்தானே?
எனவே, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைக் கையாளும் விதம் குறித்த விவாதத்தை தொடங்கிவைக்க வேண்டும். இந்தப் பிரச்னைக்கு உளவியல் ரீதியான தீர்வை நோக்கிச் செல்வதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

புதிய எச்ஐவி தொற்றுள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பில் 50 சதவீதம் பேர் 15 முதல் 25 வயதுக்குள்பட்டவர்கள் என்று தெரியவருகிறது. பாலியல் கல்வி குறித்த புரிதல் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளப்படவில்லை.
எண்ணம், பேச்சு, செயல் இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். மாணவர்கள் இயற்கையை நேசிப்பவர்களாக, பாதுகாவலர்களாக மாற வேண்டும்.
எல்லோரிடமும் அன்புடன் இருத்தலும், நிறைய படிப்பதுடன், பொய் பேசாமல் வெளிப்படையாக இருத்தலும் அவசியம்' என்றார் ரோஹிணி.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் இணைச் செயலர் ப. சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் க. துளசிதாசன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.

கருத்துகள் இல்லை: