செவ்வாய், 29 ஜூலை, 2014

ரயில்வே 2ம் வகுப்பு 'ஸ்லீப்பர்' பெட்டிகள் இனி கிடையாது ! பயணிகளின் சனிதிசை ஆரம்பம் !

புதுடில்லி: எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களில் உள்ள, இரண்டாம் வகுப்பு, 'ஸ்லீப்பர் கிளாஸ்' பெட்டிகளை, மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகளாக மாற்ற, ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில், சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டிகளே இல்லாத சூழல் ஏற்படும்.ரயில்வே துறை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழல் ரயில்வேக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், தற்போதைய காலத்துக்கு ஏற்றபடி, ரயில்வே துறையை நவீனமயமாக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.ரயில்வே துறையை நவீனப்படுத்த, அடுத்த, 10 ஆண்டுகளில், 5 லட்சம் கோடி ரூபாய் வரை தேவைப்படுவதாக, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, சமீபத்தில் தெரிவித்தார்.எனவே, ரயில்வே துறையில் வருவாயை பெருக்கும் நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாதாரண மக்கள் பற்றி சிந்திக்காத எந்த அரசும் அழிய தான் செய்யும். பாஜக விற்கும் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நிருபிக்கும் மற்றொரு திட்டம். இனி இங்கிருந்து டெல்லி, மும்பை போகும் சாதாரண மக்கள் எல்லாம் டவுன் பஸ், டவுன் பஸ்ஸா பிடிச்சு மாறி மாறி போக வேண்டியதுதான்.


மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகள்:

இதுகுறித்து, ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: ரயில்வேயை நவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதன்படி, தற்போது, எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களில் உள்ள, இரண்டாம் வகுப்பு, 'ஸ்லீப்பர் கிளாஸ்' பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக, அந்த பெட்டிகளை, மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகளாக மாற்றதிட்டமிடப்பட்டுள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளில், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் முழுவதையும், படிப்படியாக, 'ஏசி' பெட்டிகளாக மாற்றுவது குறித்து, பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மூத்த அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.சோதனை முயற்சியாக, எர்ணாகுளத்தில் இருந்து, நிஜாமுதீன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின், 'எஸ் - 2' இரண்டாம் வகுப்பு பெட்டி, 'ஏசி' மூன்றாம் வகுப்பு பெட்டியாக மாற்றப்பட்டுள்ளது.

'ஏசி சேர் கார்' ஆக மாற்றம்:

இதேபோல், சென்னையிலிருந்து, மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலிலும், ஒரு பெட்டி, 'ஏசி சேர் கார்' ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை, படிப்படியாக அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களிலும் செயல்படுத்தும் திட்டம் உள்ளது. இதன் காரணமாக இனி, இரண்டாம் வகுப்பு பெட்டிகளை தயாரிக்கும் பணி குறைக்கப்பட்டு, 'ஏசி' பெட்டிகளின் தயாரிப்பு அதிகரிக்கப்படும்.இன்னும், ஐந்து அல்லது ஆறு ஆண்டு களில், இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், இனிமேல், சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டிகளே, எந்த ரயிலிலும் இருக்காது. அனைத்து பெட்டிகளும், 'ஏசி' பெட்டிகளாக மாறுவதால், ரயில்வே துறை நவீனமயமாவதுடன், வருவாயும் அதிகரிக்கும்.இவ்வாறு, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏன் இந்த திட்டம்?



*ரயில்வேயை நவீனப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த திட்டத்தை செயல்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
*ஆனாலும், ரயில்வேக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காகவே, இந்த முடிவுக்கு ரயில்வே துறை வந்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
*கடந்த, 30 ஆண்டுகளில், 674 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், 317 திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
*இந்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற, 1 லட்சத்து, 82,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
*சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கான பயணக் கட்டணத்தை விட, 'ஏசி' மூன்றடுக்கு பெட்டியில் கட்டணம் அதிகம் என்பதால், ரயில்வே துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
*எர்ணாகுளத்தில் இருந்து நிஜாமுதீன் செல்ல, இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு, 925 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
*மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டியில்இதற்கான கட்டணம், 2,370 ரூபாயாக இருக்கும்.

சாத்தியமா?

தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்க செயல் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:ரயில்வே துறைக்கு உட்பட்ட ரயில்களில் மொத்தம், 5,800 ரயில் பெட்டிகள் உள்ளன. இவற்றில், 1,900 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுடைய பெட்டிகள். பெரும்பாலான நடுத்தர மக்கள், இந்த வகை பெட்டிகளில் தான் பயணிக்கின்றனர்.ரயில்வே துறைக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவது, இந்த பெட்டிகளே. இதனால், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுள்ள பெட்டிகளை அகற்றி விட்டு, மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகளாக மாற்றுவது, சாதாரண காரியமல்ல. அது தொடர்பான தகவலும் தவறு. கைவிடப்படும் பெட்டிகள் மற்றும் புதிய ரயில்களுக்கான பெட்டிகளின் தேவைக்கேற்ப, புதிய பெட்டிகள் வழங்கப்படுவதில்லை. கடந்த, 2013 - 14ம் ஆண்டில், 147 பெட்டிகள் ஓரங்கட்டப்பட்டன. இவற்றில், 57 பெட்டிகள் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுடையவை. நடப்பு நிதியாண்டில், 48 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுள்ள பெட்டிகள் ஓரங்கட்டப்பட்டன. அதற்கு மாற்றாக, 30 பெட்டிகளே தரப்பட்டன. நடப்பாண்டிற்கு புதிய ரயில்களுக்கு, 45 பெட்டிகள் தேவை. அதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஆண்டுதோறும், 5,500 பெட்டிகள் தேவையுள்ள நிலையில், 3,200 பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. சென்னை ஐ.சி.எப்., மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆர்.சி.எப்., ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே, ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன.உத்தர பிரதேசம் மாநிலத்தில் துவங்கப்பட்ட ரயில் பெட்டி தொழிற்சாலையில், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், தயாரிப்பு பணி துவங்கவில்லை.ரயில் பெட்டி தொழிற்சாலையை உருவாக்க, ரயில்வே துறையால், போதிய நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத சூழல் உள்ளது. இதனால், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியம். அதன் மூலம், பெட்டி தயாரிப்பை அதிகப்படுத்தி, பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.இவ்வாறு, அவர் கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை: