சனி, 3 நவம்பர், 2012

தமிழ் மக்களுக்கு எது கிடைத்தாலும் குழப்பியேதான் தீருவோம், TNA

தீர்வை மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு எது கிடைத்தாலும் தமிழ் மக்களுக்காக யாரென்ன செய்தாலும் அதைக் குழப்பியேதான் தீருவோம் என்று வெளிப்படையாகவே செயற்பட ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். “இனி தமிழ்மக்களுக் கான தீர்வுக்கு என்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு இந்தியாவையும் சர்வதேசத்தையுமே சார்ந்ததாகும்” என்று அண்மையில் தங்களது கையாலாகாத்தனத்தை அறிவித்து விட்டு, இங்கு எது நடந்தாலும் அதைக் குழப்புவதன் மூலம் தங்கள் இருப்பைக் காட்டிக்கொண்டிருக்கலாம் என்று முடிவெடுத்துவிட் டார்கள் என்று தெரிகிறது.
நேற்றுமுன்தினம் வவுனியாவில் பண்டாரவன்னியன் நினைவு தின நிகழ்வின்போது, தங்கள் கட்சிப் பதாகையைக் கொண்டுவந்து கட்டி நிகழ்ச்சியைக் குழப்பினார்கள் என ஏற்பாட்டுக்குழுவினர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்கள். அரசியல் கலப்பற்ற விதத் தில் நடத்துவதென வவுனியா நகரசபையில் முடிவெடுத்தபிறகே அதன்படி நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, இடையில் தனது ஆதரவாளர்களுடன் புகுந்த கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் மேடையில் தமது கட்சியின் பதாகையை வலோத்காரமாகக் கட்டு வித்திருக்கிறார்.இது அரசியல் நிகழ்ச்சியல்ல, பதாகையை அகற்ற வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டபோது அடா வடியாக மறுத்திருக்கிறார். ஏற்பாட்டாளர்களும் விழாக்குழுவினரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கலைந்துசென்ற பிறகு, எம்.பியின் ஆதரவாளா;களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தை அங்கு நடத்தியிருக்கிறார்கள்.
அதுபோலவே, நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நால்வர் கலந்து கொண்டு கூட்டத்தைக் கூச்சலிலும் குழப்பத்திலும் முடித்திருக்கிறார்கள். இதற்கு முன்னர் கடந்த மாதம் நடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தையும் இவ்வாறே அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களோடு கத்திக் கூச்சலிட்டுக் குழப்பியிருந்தார்கள்.
அதற்கு முன்னரெல்லாம் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இவர்கள் அலட்சியப்படுத்தி வந்தார்கள். மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளும், அதற்கான திட்டங்களும், அபிவிருத்திகளும் தங்களது அரசியலுக்கே எதிரானது என்ற நோக்கில் இவர்கள் உதாசீனத்துடன் இருந்தார்கள். ஆனால், இந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளால், மக்களின் தேவைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன, அபிவிருத்திகள் நடக்கின்றன என்று தெரியவந்தவுடன் கூட்டமைப்பினர் முழுமூச்சாக இக்கூட்டங்களுக்குச் செல்வதில் ஆர்வங்காட்டினார்கள்.
இந்தக் கூட்டங்களுக்கு தங்களுக்கு முறையான அழைப்பு அனுப்பப்பட வேண்டும் என்றும், அழைப்புக் கடிதம் இன்னும் வந்துசேரவில்லை என்றும் நச்சரிக்கத் தொடங்கினார்கள். தபால் நிலையத் திற்கெல்லாம் போன் போட்டு விசாரித்து கடிதம் கைக்கு வந்துசேரவில்லை என்பதை அவர்களது பத்திரிகையிலும் எழுதிப் பிரசுரித் திருந்ததை சமீப நாட்களில் காணமுடிந்தது.
இத்தகைய அவர்களது திடீர் ஆர்வத்தையும், கடைசியாக நடந்த இரு கூட்டங்களிலும் இந்தக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கத்திக் கூச்சலிட்டிருப்பதையும், அடுத்த நாளே அவர்களது பத்திரிகையில் கூட்டம் குழப்பத்தில் முடிந்ததை விவரித்து எழுதுவதையும் பார்க்கும்போது, இவர்கள் திட்மிட்டே இத்தகைய நடவடிக்கையில் இறங்கியிருப்பதை யாருக்கும் புரிந்துகொள்வது சிரமமல்ல.
திவிநெகும சட்டமூலத்தை அமுல்படுத்த முடியாமல் போனால், யாழ்ப்பாணத்தில் உள்ள 54,199 சமுர்த்திக் குடும்பங்களின் நிலை என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு என்ன பதில் கூறுகிறது எனக் கேட்டதற்கே, கூட்டமைப்பு எம்.பி.க்கள் நிதானமிழந்து கூச்சலிடத் தொடங்கியிருக்கிறார்கள். மக்களைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாக்கும் அரசியலைச் செய்கிறீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டினால் கோபம் வருவது இந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு நல்ல தல்ல; மக்களுக்கும் நல்லதல்ல.      சலசலப்பு.com

கருத்துகள் இல்லை: