வெள்ளி, 2 நவம்பர், 2012

திருப்பரங்குன்றம் மலை குகைக்குள் வெடிக்கவிருந்த "டைம்பாம்' செயலிழப்பு

மதுரை திருப்பரங்குன்றம் மலை குகைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த, சக்தி வாய்ந்த "டைம்பாம்' உட்பட வெடிகுண்டு புதையலை நேற்றிரவு போலீசார் கண்டுபிடித்து செயலிழக்க செய்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில், தர்கா பின்புறம், 250 அடி தூரம், அடிவாரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் இருந்து மலையின், 100 அடி தூரத்திற்கு இடையே, குகைக்குள் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு நேற்று மாலை 5.30 மணிக்கு தகவல் கிடைத்தது.

எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவுபடி சிறப்பு புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சக்ரவர்த்தி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தில், தீவிர சோதனை நடத்தினர். அப்போது இருட்டத் துவங்கியதால், டார்ச் லைட் வெளிச்சத்தில் குகைகளை தேடினர். அப்போது, அங்கு குவிக்கப்பட்டிருந்த கற்களை அகற்றியபோது, அதன் கீழ் மண்ணால் மூடப்பட்ட குழி இருந்தது. மண்ணை அகற்றிய வெடிகுண்டு நிபுணர்கள், பக்கவாட்டு பகுதியை சிறிது, சிறிதாக தோண்டினர். இளம் பச்சை நிறத்தில் ஒன்றரை அடி உயரம் கொண்ட, பாலித்தின் கவரால் சுற்றப்பட்ட பிளாஸ்டிக் வாளி இருந்தது. மூடியை திறந்து பார்த்தபோது, அதில், சக்தி வாய்ந்த "டைம்பாம்,' உட்பட வெடிபொருட்கள் இருந்தன.
தலா 9 வோல்ட் திறன் கொண்ட 16 பேட்டரிகளுடன் இணைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். அத்துடன், பெட்ரோல் சிலிண்டருடன் கூடிய வெடிகுண்டு, நான்கு பைப் வெடிகுண்டுகள், 6 பென் டார்ச் பேட்டரிகள், மொபைல் போனுடன் கூடிய வெடிகுண்டு, வெடிக்க உதவும் அமோனியம் பவுடர் டின் உள்ளிட்ட வெடிபொருட்களையும் செயலிழக்க செய்தனர்.
நேற்றிரவு 11 மணிக்கு டைம்பாம் வெடிக்கும்படி பேட்டரியுடன் இணைப்பு கொடுத்திருந்தனர். இது வெடித்திருந்தால் திருப்பரங்குன்றம் மலையில் மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்.
மொபைல் வெடிகுண்டு: மதுரையில், கைப்பற்றப்பட்ட, இந்த மொபைல் போனுடன் கூடிய, வெடிகுண்டை வெடிக்க வைக்க, மொபைலுக்கு "மிஸ்டு' கால் கொடுத்தால் போதும், உடனே வெடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.http://www.dinamalar.com/

கருத்துகள் இல்லை: