வெள்ளி, 2 நவம்பர், 2012

சென்னையில் விமானம் மீது பாய்ந்த லேசர்.. விமானத்தை தரையிறக்க முடியாமல் தவித்த பைலட்டுகள்!

சென்னை: விமானத்தின் மீது லேசர் ஒளியைப் பாய்ச்சி பைலட்டின் கண்களை சில நொடிகள் இருள வைத்து விமானத்தையே விபத்துக்குள்ளாக்கும் சதி சென்னையில் நடந்துள்ளது.
துபாயில் இருந்து நேற்றிரவு 8.40 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் (எண்-EK 546) சென்னைக்கு வந்தது. இதில் 242 பயணிகளும், 9 பணியாளர்களும் இருந்தனர். கத்திப்பாரா- பரங்கிமலை பகுதி வழியே வந்து விமானத்தை விமானி தரை இறக்க முயன்றார்.
அப்போது ஓடுபாதை அருகே உள்ள பகுதியிலிருந்து விமானத்தின் காக்பிட் விண்ட் ஸ்கிரீன் கண்ணாடி மீது பச்சை நிற மர்ம லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது. இதனால் விமானிகளின் கண்கள் கூசின.

அவர்கள் விமானத்தை தரை இறக்க முடியாமல் திணறினர். இது குறித்து உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்த விமானிகள், விமானத்தை மிகவும் சிரமப்பட்டு சாமர்த்தியமாக தரையிறக்கினர்.
விமானத்தில் லேசர் ஒளி பாய்ந்தது பற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் விமானி மீண்டும் புகார் செய்தார். இது குறித்து விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.
பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன், விமான நிலைய உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் மகிமை வீரன் தலைமையிலான டீம் விசாரணையை நடத்தி வருகிறது.

அந்த லேசர் ஒளி பரங்கிமலை, கத்திப்பாரா பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதியிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானம் மீது லேசர் ஒளிக்கற்றையை பாய்ச்சி விமானியை திணறடித்து விமானத்தை விபத்துக்குள்ளாக்க சதி நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

கத்திப்பாரா பகுதியில் மெட்ரோ ரயில் மற்றும் பெரிய கட்டிடங்கள் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இங்கு கோணங்களை துல்லியமாகப் பார்க்க லேசர் பயன்படுத்தப்படுவதுண்டு. எனவே அங்கு பயன்படுத்தப்பட்ட லேசர் ஒளி விமானம் மீது பாய்ந்ததா என்றும் விசாரணை நடக்கிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி துபாயில் இருந்து சென்னை வந்த விமானம் கோட்டூர்புரம் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது இதே போல் பச்சை நிற லேசர் ஒளி பாய்ந்ததும், அப்போது விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.
ராணுவத்தின் ஆயுத பயன்பாடுகள் தொடர்பாக பயிற்சிகளுக்காகவும் லேசர்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால், அந்த லேசர்கள் எங்கு பயன்படுத்தப்படும் என்பதை ராணுவம் முன்கூட்டியே விமான நிலையங்களுக்குத் தெரிவித்துவிடும். எனவே அந்தப் பகுதிகளில் விமானங்கள் பறப்பதில்லை. ஆனால், சென்னை விமான நிலையத்தின் அருகே ராணுவம் எந்த வகையிலும் லேசர்களை பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனி போன்ற நாடுகளில் லேசர் கதிர்களை கண்காணிக்க என்றே தனி அமைப்பும் கருவிகளும் உள்ளன. இதனால் யாராவது தவறாக அதைப் பயன்படுத்தினால் உடனடியாக கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், நம் நாட்டில் அந்த வசதி இல்லை.http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: