ஞாயிறு, 28 அக்டோபர், 2012

ரவுடி கும்பலை பிடிக்கும் போது சப்-இன்ஸ்பெக்டர் குத்திக்கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது முளைக்குளம். இந்த ஊரைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் மருதுபாண்டியர் குருபூஜையையொட்டி அருகில் உள்ள புதுக்குளம் என்ற ஊரில் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.அங்கு மருதுபாண்டியர்களின் படத்தை வைத்து மாலை அணிவித்து விட்டு காளையார்கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். அதன்படி புதுக்குளம் அப்போது புதுக்குளத்தை சேர்ந்த பிரபு, பாரதி, குமார் ஆகியோர் காரில் அந்த வழியாக வந்தனர். அவர்களும் மருதுபாண்டியர்களின் படத்துக்கு மாலை அணிவித்தனர். இவர்களுக்கும், செல்லப்பாண்டிக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது.இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் திடீரென பிரபு தரப்பினர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் செல்லப்பாண்டியை குத்தி விட்டு அங்கிருந்து காரில் தப்பினர்.காயம் அடைந்த செல்லப்பாண்டி, அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு கருணாநிதியிடம் புகார் செய்தார். பிரபு மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால் ரவுடிகள் பட்டியலில் அவர் உள்ளார்.இதையடுத்து பிரபுவை பிடிப்பதற்காக துணை சூப்பிரண்டு கருணாநிதி, திருப்பாச்சேத்தி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன், ஏட்டுகள் சிவகுமார், கர்ணன் ஆகியோர் 2 வாகனங்களில் புதுக்குளம் விரைந்தனர்.ஆனால் பிரபு தரப்பினர் அருகில் உள்ள வேம்பத்தூருக்கு தப்பிச்சென்றது தெரியவரவே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.அங்கு நின்ற காரில் பிரபுவும், அவருடன் வந்தவர்களும் இருந்ததைப் பார்த்த துணை சூப்பிரண்டு கருணாநிதி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர்.அப்போது பிரபு கும்பல், துணை சூப்பிரண்டு கருணாநிதி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோரை தாக்க முயன்றது. அவர்களை தாக்க விடாமல் உடன் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன், ஏட்டுகள் சிவகுமார், கர்ணன் ஆகியோர் தடுக்க முயன்றனர். எனவே, பிரபு கும்பல் அவர்களை சரமாரியாக கத்தியால் குத்தியது.இதில் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன், ஏட்டுகள் சிவகுமார், கர்ணன் ஆகியோர் குத்துப்பட்டு துடிதுடித்து கீழே விழுந்தனர்.
உடனே பிரபு கும்பல் அங்கிருந்து காரில் தப்பி ஓடியது.பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன், ஏட்டுகள் சிவக்குமார், கர்ணன் ஆகியோரை போலீஸ் படையினர் மீட்டு, மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் இறந்துபோனார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.சப்-இன்ஸ்பெக்டரை குத்திக் கொலை செய்த பிரபு கும்பலைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடையவர்கள். இவர்கள் மீது சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி, சிப்காட், சிவகங்கை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன."இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தென்மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணி, சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் ஆகியோர் வேம்பத்தூருக்கு விரைந்து சென்றனர்.சப்-இன்ஸ்பெக்டர் கொலையைத் தொடர்ந்து வேம்பத்தூர் கிராமத்தினர் பீதியுடன் கதவை பூட்டிக்கொண்டு வீடுகளுக்குள்ளேயே இருந்து விட்டனர். தெருக்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் கிராமமே வெறிச்சோடி காணப்பட்டது.கொலையாளிகளைப் பிடிப்பதற்காக வேம்பத்தூரில் போலீஸ் படை குவிக்கப்பட்டது. ரவுடி பிரபு கும்பல் தப்பிய காரின் எண் பற்றி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி போலீசார் அவர்களை வெளி மாவட்டத்துக்கு தப்பவிடாமல் கண்காணித்து வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன், நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த கைலாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 2011-ம் ஆண்டு அவர் நேரடியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, சங்கரன்கோவிலில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருப்பாச்சேத்தி சப்-இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.ஆல்வின் சுதனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரது கொலை பற்றி, சொந்த ஊரில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: