சனி, 1 செப்டம்பர், 2012

வாய்தா ராணிக்காக மணலில் கயிறு திரிக்கும் சோ!

5.9.12 தேதியிட்ட துக்ளக் இதழில் வந்த கேள்வி பதில் இது:
கேள்வி: ஜெயலலிதா மீதான பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வக்கீல் ஆச்சார்யா அலுத்துப் போய் ராஜினாமா செய்து விட்டது பற்றி?
பதில்: அவர் அலுத்துப் போய் ராஜினாமா செய்தாரா, வெறுத்துப் போய் ராஜினாமா செய்தாரா அல்லது வேறு ஏதாவது திட்டத்துடன் ராஜினாமா செய்தாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் ஒரு விஷயம். பத்திரிகைகளில் அவர் தரும் பேட்டிகளைப் படிக்கும் போது, ‘ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை, தான் நடத்தினால்தான், அதில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வரும்’ என்று பொருள்படும்படியாக, பல விஷயங்களை அவர் கூறி வருகிறார். ஒரு பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி அவர் நடந்து கொள்வதாக எனக்குத் தெரியவில்லை.

பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் என்பவர் குற்றம் சாட்டப்பட்டவரின் விரோதி அல்ல. அவருடைய எதிரி அல்ல. குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமான சாட்சியங்களோ, வாதமோ அவர் கண்ணில் பட்டால், அதை முதலில் நீதிமன்றத்தில் முன் எடுத்து வைப்பது அவருடைய கடமை. ‘குற்றவாளிக்குச் சாதகமான விஷயங்களை அவர் தரப்பு வக்கீல் கவனித்துக் கொள்ளட்டும், எனக்கென்ன?’ என்று அவர் இருந்துவிடக் கூடாது. அவராக முன் வந்து, இன்னின்ன அம்சங்கள் குற்றவாளிக்குச் சாதகமாக உள்ளன’ என்பதை நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்ல வேண்டும். எப்படியாவது தண்டனை வாங்கித் தருவேன் என்று செயல்படுவது அவருடைய கடமை அல்ல. இது கிரிமினல் வழக்குகளைப் பொறுத்த அடிப்படை சட்டத் தத்துவங்களில் ஒன்று, சுப்ரீம் கோர்ட் பல்வேறு வழக்குகளில் இதை வலியுறுத்தியிருக்கிறது. இதை ஆச்சார்யா லட்சியம் செய்கிற மாதிரி தெரியவில்லை.
வாய்தா-ராணிஆச்சார்யா ஊடகங்களில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வெளிப்படையானவை. வாய்தா மேல் வாய்தா வாங்கி, நீதிபதி, வழக்கறிஞர் யாரும் ஜெயாவை விசாரிப்பதற்கு தகுதி இல்லை என்று புதுப்புது வழக்குகள் போடுவது, அதையும் உச்சநீதிமன்றம் வரை போய் இழுத்தடிப்பது, ஆச்சார்யா மேலேயே சில வழக்குகள் போட்டு மிரட்டியிருப்பது, நீதிபதியே களைத்துப் போய் ஜெய-சசிகலாவை நிர்ப்பந்தம் செய்யாமல் இருப்பது குறித்துத்தான் ஆச்சார்யா வெறுத்துப் போய் பேசியிருக்கிறார். இவை எவை குறித்தும் சோ பேசவில்லை என்பது அவரது அப்பட்டமான பூணூல் பாசமே அன்றி வேறல்ல.
அடுத்து ஜெயாவை எதிரியாக நினைக்கக் கூடாது என்று ஆச்சார்யாவுக்கு சோ உபதேசம் செய்கிறார். எப்படியாவது தண்டனை வாங்கித் தருவேனென்று செயல்படக்கூடாது என்று வழக்கறிஞர் தர்மம் பேசுகிறார். அதாவது ஆச்சார்யா கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டுமென்பதுதான் சோவின் விருப்பம். ஆனால் ஜெயாவின் மிரட்டல், நிர்ப்ந்தங்களால் விலகிப் போயிருக்கும் ஆச்சார்யாவை வழக்கறிஞர் தர்மம் தெரியாமல் நடந்து கொண்டிருப்பதாக வெட்கமே இல்லாமல் தூற்றுகிறார் சோ. நரித் தந்திரம் என்பதற்கு இலக்கணமே சோ தான் என்பதற்கு இந்தப் பதில் ஒரு சான்று.
ஆச்சார்யா விலகியிருக்கும் காரணங்கள் வெளிப்படையானவை. அந்தக் காரணங்களுக்கு பதில் சொன்னால் ஜெயாவின் அழுகுணியாட்டத்தை நியாயப்படுத்த வேண்டியிருக்குமென்பதால் சோ லீகலாக வேறு விசயங்களை இட்டுக்கட்டி பேசுகிறார். அதுவும் உப்புப்பெறாத விசயங்களை வைத்து. மணலில் கயிறு திரிப்பது என்பது இதுதான். நேற்று ஜெயலலிதாவின் திரையுலக நண்பர்களுக்கு போயஸ் தோட்டத்தில் விருந்தாம். அதில் பங்கேற்ற ஆண் நடிகர் சோ மட்டுமே. விருந்தில் மட்டுமல்ல ஜெயாவின் பார்ப்பன கிச்சன்கேபினெட்டில் முக்கிய நபராக இருக்கும் இந்த ஆள் இப்படி பேசாமல் வேறு எப்படி பேசுவார்?

கருத்துகள் இல்லை: