சனி, 1 செப்டம்பர், 2012

PRP கிரானைட் வசந்த மாளிகை

மேலூர்: மதுரை தெற்குதெருவில் உள்ள "பி.ஆர்.பி. கிரானைட் எக்ஸ்போர்ட்' அலுவலகத்தில், மலைக்க வைக்கும், பிரமாண்டமான "கிரானைட் பூங்கா' எனும் "வசந்த மாளிகை' அமைத்துள்ளனர். அங்கு, விலை உயர்ந்த அலங்கார சிலைகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. எங்கு திரும்பினாலும், முகம் தெரியும் அளவுக்கு கிரானைட் பூங்கா ஜொலிக்கிறது.

தெற்குதெருவில் 400 ஏக்கரில், பி.ஆர்.பழனிச்சாமியின், "பி.ஆர்.பி. கிரானைட் எக்ஸ்போர்ட்' தலைமை அலுவலகம் மற்றும் பாலிஷ் ஆலைகள் உள்ளன. வெட்டி எடுக்கப்படும் ஏற்றுமதி தரம் வாய்ந்த கிரானைட் கற்கள், பாலிஷ் செய்வதற்காக எடுத்து வரப்படுகிறது.
இத்தாலி தொழில்நுட்பம்:
இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, 12 விதமான ராட்சத பாலிஷ் இயந்திரங்களில் வைத்து, வெட்டி எடுக்கின்றனர். பின், அவற்றை பாலிஷ் செய்கின்றனர். அவற்றில், நவீன தொழில்நுட்பத்தை புகுத்தி யானை, புலி, சிங்கம், மான், மயில், டால்பின் போன்ற விலங்குகளை தத்துரூபமாக உருவாக்குகின்றனர். பங்களாக்களில் பதிக்கப்படும் கிரானைட் கற்களை, விதவிதமாக செதுக்கி பார்வைக்காக வைத்துள்ளனர். வசந்த மாளிகை: வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, சர்வதேச தரத்தில் 500 மீட்டர் நீளம், 250 மீட்டர் அகலத்தில், முற்றிலும் "குளுகுளு' வசதியுடன், "கிரானைட் பூங்கா' எனும் நிஜ "வசந்த மாளிகை' அமைத்துள்ளனர். இங்கு, கிரானைட் கற்கள், சிலைகளை மெருகூட்டி வைத்துள்ளனர். மாதிரி கிரானைட் பங்களா, மாடிப்படி, செயற்கை நீரூற்று, உருவம் பொறிக்கப்பட்ட கிரானைட் போட்டோக்களை, கற்களில் செதுக்கியும், ஓவியம் தீட்டியும் வைத்துள்ளனர்.

ஒரு நாள் போதாது:

பூங்காவின் அழகை காண, ஒரு நாள் போதாது. பல ஆயிரம் கோடி ரூபாயை கொட்டி, "நம்பர் 1' இடத்தில் உள்ள 25 வகையான கிரானைட் கற்களால், "வசந்த மாளிகை' செதுக்கப்பட்டுள்ளது. "வசந்த மாளிகை' யின் சுவர்களில், பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன்கள் வாங்கிய சர்வதேச விருதுகளின் படங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மாளிகையின் அழகை கண்டு வியக்கும் வெளிநாட்டவர், போட்டோ எடுத்து கொள்வது உண்டு. சர்வதேச அளவில், இப்படி ஒரு "கிரானைட் மாளிகை' யை, இனி உருவாக்க முடியுமா? என்பதும் சந்தேகம் தான்.

கருத்துகள் இல்லை: