திங்கள், 27 ஆகஸ்ட், 2012

பிளாக் மெயில் சுப்பிரமணியசாமியை எதிர்த்து Congress கறுப்பு கொடி போராட்டம்

தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.எஸ்.அழகிரி, பி.விஸ்வநாதன், முன்னாள் எம்.பி.க்கள் பி.வி.ராஜேந்திரன், கே.எஸ்.சவுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர்.ராமசாமி, சுந்தரம், வி.ராஜசேகரன், டி.புஷ்பராஜ், செல்வபெருந்தகை, சுப்புராம், வாலாஜா ஹசன், ஜானகி ராமன், டி.என்.முருகானந்தம், பி.எஸ். விஜயகுமார், எஸ்.ராஜ்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்’நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியாவின் பொருளாதார நெம்புகோலைக் கையில் எடுத்துள்ள கட்டத்தில் உச்சநீதிமன்றம் தனிச் சிறப்பானதொரு தீர்ப்பால் அவர்தம் இயக்க விசையை அதிகரிக்கச் செய்துள்ளது.துரியோதனாதிகள் பக்கம் நின்று கொண்டே நரிதந்திரத்தை தன் பணியாய்க் கொண்டிருந்த சகுனியைப் போலவே, பாரதீய ஜனதா, ஜனதாதளக் கட்சிகள் பக்கம் நின்று தனது சாணக்கியத் தில்லு முல்லுகளை நாளும் கையாண்டு வரும் டாக்டர் சுப்பிரமணியசாமியின் பொய் வழக்கைத் தவிடுபொடியாக்கிவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புதான் அது.
2ஜி தொடர்பான வழக்கில் முன் ப.சிதம்பரத்தை சிக்கவைக்க சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். எவ்வித அடிப்படை ஆதாரமில்லாமல் இவ்வழக்கை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் தொடர் முயற்சியில் சுப்பிரமணியசாமி தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். கடந்த பிப்ரவரி 4-ல் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றச் சிறப்பு நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியதன் மூலம் அரசியல் பிளாக்மெயில் யுக்திகளுக்கு மரண அடியைக் கொடுத்திருக்கிறது. சுப்பிரமணியசாமி போன்றோரால் நீதிமன்றங்களில் வழக்குகளை தொடர்வதன் மூலம், அரசியல் யுத்திகளின் சதுரங்கக் காய்களை நகர்த்த முடியும் என்ற அவலநிலைக்கு சில கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.

பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வர இத்தகை யோரின் துணையை நாடியுள்ளது நகைப்புக்குரியது. சுப்பிரமணியசாமி, அ.தி.மு.க. தலைமையை ஒரு காலத்தில் பிளாக் மெயில் செய்தது நினைவிருக் கலாம். இவர் தி.மு.க.வின் தலைமையை பலமுறை பிளாக் மெயில் செய்துள்ளார். ஒருமுறை தி.மு.க. ஆட்சியை பிரதமர் சந்திரசேகர் ஆட்சியின்போது கலைத்தது நான்தான் என்று மார்தட்டிக் கொண்டார். இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் மூத்த, முன்னணித் தலைமையின் தூணாக எழுந்து நிற்கும் சிதம்பரத்தை வீழ்த்துவதன் மூலம் காங்கிரஸ் கட்சியையும், அரசையும் பலவீனப்படுத்த முயலும் பாரதீய ஜனதாவின் தந்திரோபாயங்களில் ஒன்றே சுப்பிரமணிசாமியின் வழக்காகும்.>தமிழ்நாட்டில், எல்லா மாவட்டங்களிலும், நகர்களிலும், சுப்பிரமணிய சாமியின் தலை தென்பட்டவுடனே, கறுப்பு கொடியேந்தி, அவர் வருகையை எதிர்த்து கருப்பு கொடி காட்டவேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென்பதே எங்களது வேண்டுகோளாகும்.அரசியலில் எதிரிகள் இருக்கலாம். ஆனால் அரசியலில் குடிலன்கள் இருக்கக்கூடாது. டெல்லி குடிலன், சுப்பிரமணியசாமியின் நிழல்கூட அரசியலரங்கில் படக்கூடாது. அரசியல் களம் தூய்மையடைய, சுப்பிரமணியசாமியை போன்ற கறைகள் நீங்குவது அவசியமே’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: