திங்கள், 27 ஆகஸ்ட், 2012

15 கிரானைட் அதிபர்களை பிடிக்க 8 தனிப்படைகள்அழகிரி மகன் உள்பட

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் உள்பட குவாரி அதிபர்கள் 15 பேரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 90 குவாரிகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 ஆயிரம் கிரானைட் கற்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் ஒரு லட்சம் கிரானைட் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதிப்பிடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ள இந்த முறைகேடுகள் குறித்து இதுவரை 40 சதவீதம் அளவுக்கே மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும் 60 சதவீத பணிகள் உள்ளதால் அதிகாரிகளின் சோதனையை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து கலெக்டர் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

முறைகேட்டில் ஈடுபட்ட குவாரி அதிபர்களின் வங்கி கணக்குகள், பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
மீண்டும் சிறையில் பி.ஆர்.பி.:
இதற்கிடையே போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட கிரானைட் அதிபரும் பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளருமான பி.ஆர்.பழனிச்சாமி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
3 நாட்கள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், இன்று மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பழனிச்சாமிக்கு செப்டம்பர் 7ம் தேதி வரை சிறைக் காவலை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, அவர் மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் உள்பட குவாரி அதிபர்கள் 15 பேரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் துரை தயாநிதியின் முன் ஜாமீன் மனு விசாரணையை வரும் 4ம் தேதிக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளி வைத்துள்ளது.

முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் உள்பட 5 பேர் விரைவில் போலீசில் சரணடைய உள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே கிரானைட் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரையும், மேலூர் ஜோதி நகரைச் சேர்ந்த பிரசாத் என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

சொக்கலிங்கம் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் ஓய்வு பெற்ற பின்பு மதுரா கிரானைட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இதுவரை கிரானைட் முறைகேடு தொடர்பாக மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: