வியாழன், 30 ஆகஸ்ட், 2012

இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது

பீஜிங்:""இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தான், அவர்கள் அணியும் தங்க நகைகள் எடுப்பாக இருக்கிறது,'' என, சீனா பத்திரிகை தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து வெளியாகும், "பீப்பிள்ஸ் டெய்லி' என்ற பத்திரிகையில், "இந்திய அழகிகள் அணியும் தங்க நகைகள்' என்ற தலைப்பில், கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட, பல மாடல் அழகிகளின் படங்களுடன் வெளியாகியுள்ள, அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது:இந்தியப் பெண்கள், மூக்குத்தி இல்லாமல் வெளியில் செல்வதில்லை. அந்நாட்டில் தெருவில் பிச்சைஎடுக்கும் சிறுமிகள் கூட, மூக்குத்தி அணிந்திருப்பர். அதனால், தங்கம் வாங்குவதை அந்நாட்டு அரசும் ஊக்குவித்து வருகிறது. தங்கத்தின் மீது இந்தியர்கள் அதிக ஆர்வம் கொண்டு உள்ளனர்.அனைத்து விதமான நகைகளில், தங்க நகைக்கே இந்தியர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அவர்கள் கறுப்பாக இருப்பதால், தங்க நகைகள் எடுப்பாக தெரிகின்றன. கம்மல், நெக்லெஸ் உள்ளிட்ட நகைகளை அணிந்து செல்லும் பெண்களை அதிகம் காணலாம்.
பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் நகைகள் அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பலர், பெரிய அளவில், மூன்று மோதிரங்கள் வரை அணிந்திருப்பர். திருமணத்துக்குக் கூட, பெற்றோர் தங்கள் பெண்ணுக்கு தங்க நகைகளையே வரதட்சணையாக கொடுக்கின்றனர்.இது, பெண்ணுக்கு அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மண வாழ்க்கையில் ஒரு சொத்தாகவும் மாறி விடுகிறது.தங்கத்தின் மீது இந்தியர்கள் கொண்டுள்ள ஆர்வத்தின் காரணமாக, அந்நாட்டில் நகைக்கடைகள் அதிகரித்துள்ளன.இவ்வாறு, அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: