செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

நான்- விஜய் ஆண்டனியே படம் முழுக்க

MS.விஸ்வாநாதன் தன்னோட மெல்லிசைக்காலங்கள் கிட்டத்தட்ட முடிந்த பிறகே பிற துறைகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார், நடிக்கவும் வந்தார். விஜய் ஆண்டனி இசையைமைப்பில் நல்லப் பெயர் இருக்கும்போதே நடிக்கவும் வந்துவிட்டார்.
‘நான்’ திரைப்படத்தில் கிட்டத்தட்ட மௌனகுரு அருள்நிதி பாணிலயே அடிக்குரல்ல பேசியபடி படம் முழுவதும் வருகிறார் விஜய் ஆண்டனி. அவருடைய காரக்டர்தான் அவரைக் காப்பாற்றுகிறது. மற்றபடி, உடல் மொழி, டயலாக் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்களில் இன்னமும் நிறைய உழைத்திருக்கலாம் அவர்.
படத்தில் வரும் எந்தப் பெண்ணையும் மருந்துக்குக்கூடத் தொட்டுப்பார்க்கவில்லை விஜய் ஆண்டனி. அவர் படிப்பது மருத்துவமே என்ற போதிலும். (ஒரு வேளை அது அவர் மனைவியின் அன்புக் கட்டளையாகக்கூட இருக்கலாம் ) Well Knit Plot.
அதற்கேற்ற அருமையான, தெளிவான குழப்பமில்லாத திரைக்கதை. படம் தொய்கிறது என்று எந்த இடத்திலும் கூறவே இயலாது. எனினும் படத்தின் ஆரம்பக்காட்சிகள் முழுக்க நந்தா படம் போலவே இருக்கிறது. சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, தாயின் அன்புக்காக ஏங்குவது , பின்னர் அதுவே எல்லோரையும் அடித்துத் துவைப்தற்கான காரணங்களாகக் காட்டுவது…  Flirting Friend அஷோக், அவருடைய தோழர்கள் என்று அனைவரும் நாம் வழக்கமாகப் பார்ப்பவர்கள்தாம். பாடல்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தையும் உழைப்பையும் பின்னணி இசைக்கும் கொடுத்திருக்கலாம். எப்போதும் போல பாடலின் ராகத்தை இஸ்லாமியப் பின்னணிக்கென மாண்டலின் கொண்டே இசைத்திருப்பது பெரிய குறை. Psycho படத்தில் வரும் கொலைக்காட்சிகளுக்கான Viloin, Double Bass இங்கும் அவ்வப்போது வந்து போகிறது. இப்போது இருக்கிற இசையமைப்பாளர்களுக்கு எங்கிருந்தாவது உருவி பாடல்களை அமைத்துவிடுவது எளிதாக இருக்கிறது. படத்தின் காட்சிகளை உள்வாங்கி அதன் கதையை உணர்ந்து , Theme Music Concepts வைத்துக்கொண்டு இசைப்பது என்பது இமாலய முயற்சியாகத்தான் தோன்றுகிறது அவர்களுக்கு. பல இடங்களில் Predator 1 பின்னணி இசையை உணரமுடிகிறது. கற்பனை வளம் குன்றிய பின்னணி இசை, இது போன்ற த்ரில்லர் படத்துக்கு உரமேற்றத் தவறுகிறது. பழைய த்ரில்லர் படமான அதே கண்களுக்கு இசையமைத்த வேதாவை மறக்கமுடியுமா?
முன்பெல்லாம் ஆங்கிலம் கலந்து பாடல்கள் எழுதினார்கள். இப்போது ஸ்பானிஷ், போர்த்துகீசு எல்லாம்கூட  தமிழ்ப்பாடல்களில் காண முடிகிறது. “மக்காயேலா மக்காயேலா காய மவ்வா”  என்ற வரியை என்னவென்று சொல்வது? அந்தப் பாடலை பாடகர்கள் ஸ்பானிஷ் பின்னணியில் பாடியும் இருக்கிறார்கள்.  இளையராஜா Elvis Presley ஸ்டைலில் அமைத்திருந்த ரம்பம்பம் ஆரம்பம் பாடலை எப்போது கேட்டாலும் அது தமிழ்ப்பாடல் போலத்தான் ஒலிக்கும். ஆங்கிலப்பாடல் நினைவுக்கு வரவே வராது.
இந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் மேற்கத்திய இசைப்பாங்கில் அமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. ஈழக்கவிஞர் அஸ்மின் எழுதிய “தப்பெல்லாம் தப்பேயில்லை” பாடலுக்கு நமது பாணியில் இசை அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பாடலின் ஒவ்வொரு சரணத்துக்குப் பிறகும் ஆங்கிலத்தில் குரல் ஒலிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.
என்னய்யா ரொம்பவே அடக்கி வாசிக்கிறாரே நம்ம விஜய் ஆண்டனி, அடிக்க மாட்டாரா என்று நினைக்கும்போது ஒரு பாரில் பெண் விஷயத்தில் பிரச்னை செய்தவர்களை பீர் பாட்டிலை எடுத்து அடித்து உடைக்கிறார். நிஜமாகவே தனக்குள் அடக்கி வைத்திருந்த கோபத்தைச் சீறும் புலி போலக் காட்டியிருக்கிறார். சபாஷ் விஜய் ஆண்டனி.
அஷோக்கின் (சித்தார்த் வேணுகோபால்) நண்பன் சுரேஷைக் கொல்லும் காட்சிக்கென Home Theaterல் “Oh Fortuna” என்ற நாடகக் கதைப் பாடல் (Opera Choir Music) இசைக்கிறது . மிக மெதுவாகத்தொடங்கி , கிசுகிசுக்கும் ஒலியுடன் சேர்ந்திசைத்து, பின் டிரம்ஸும் யாழுமாக இசைத்து எதிர்பாராத சமயத்தில் சடாரென முடியும் ஒரு இசைக்கோவை இது. அவனைக் கொலை செய்வதும் அவ்வாறே தொடங்குகிறது. கட்டையை வைத்து அடிக்கத்தொடங்கி பின்னர் எதிர்பாராத விதமாக மேஜை நாற்காலிகளை வைத்து அடித்து பின்னர் உருட்டுக்கட்டையால் அடித்து, மாடிப்படிகளில் ஏறுபவனின் கால்களை இடறி குப்புற விழவைத்து, நடுமண்டையில் ஓங்கி அடித்து கொல்லும் காட்சிக்கு மிகவும் பொருத்தமான இசைக்கோவை.
கொன்று புதைத்து விட்டு வீடு திரும்பும்போது சுரேஷின் பைக் வாசலில் நிற்கிறது. விஜயோடு சேர்ந்து நமக்கும் தூக்கிவாரிப்போடுகிறது. பின்னரும் சாவியைத்தேடி அலைந்து களைத்துப்போய் புதைத்த இடம் வரை சென்று மீண்டும் பிணத்தைத்தோண்டி எடுத்து ஜீன்ஸ் பாக்கெட்டில் இருக்கும் சாவியை எடுத்து திரும்ப வந்து பைக்கை யாருமில்லா சாலையில் கொண்டுபோய் நிறுத்தி விட்டு, வீட்டுக்குள் நுழைந்த பின்னர் “அப்பாடா” என்று பெருமூச்சு விடுகிறாரே… நமக்கும் அப்படித்தான் இருக்கிறது.
இவ்வளவு கொலைகளையும் செய்து விட்டு அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு வளைய வருகிறாரே… அங்கு ஜெயிக்கிறார் விஜய் ஆண்டனி. அதே போல் She knows too much, so she should be killed என்று வழக்கமான ஆங்கிலப்படங்கள் பாணியில் ரூபாவையும் போட்டுத்தள்ளி விடுவார் என்று நினைக்கும் நமக்கு அவருடைய காதல் வெளிப்படுகிறது. அதுவும், அவரை அறையில் வைத்துப் பூட்டிவிட்டு , தம்மைத்தாமே தாக்கிக்கொள்ளும் காட்சி,  விஜய் ஆண்டனி மேல் பரிதாபத்தை வரவழைக்கத் தவறவில்லை.
இத்தனை கொலைகளையும் செய்துவிட்டு சாமர்த்தியமாக எல்லா இடங்களிலிருந்தும் தப்பிக்கிறார் என்பதைத்தான் நம்ப முடியவில்லை. எப்பேர்ப்பட்ட தேர்ந்த குற்றவாளியாக இருப்பினும் தவறிழைப்பது இயல்பு.  ஏதேனும் சிறு தடயமேனும் விட்டுச்செல்லமாட்டானா என்ற நமது ஆதங்கம்  அந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் கடைசியில் வருவது நம்மை ஓரளவு ஆசுவாசப்படுத்துகிறது. மேலும் “எதையும் நிரூபிக்க தடயங்கள் கிடைக்கவில்லை அதனால நீ தப்பிக்கிற” என்று அந்த இன்ஸ்பெக்டர் வலிய வந்து விஜய் ஆண்டனியிடம் வழக்கம் போலச் சொல்லாமலிருப்பதும் பெரிய ஆறுதல் நமக்கு.
பட்டுக்கோட்டை பிரபாகர் 80-களின் பிந்தைய காலங்களில் மூன்றாம் கை (நம்பிக்கை) என்னும் தலைப்பில் ஒரு நாவல் எழுதியிருப்பார். அதிலும் இதே போல் மூன்று கொலைகளைச் செய்துவிட்டு, நகரின் மணிக்கூண்டில் ஏறி ஒளிந்து கொண்டு அத்தனை களேபரங்களும் அடங்கிய பின்னர் அமைதியாக இறங்கி வந்து தன் வழமையான வாழ்க்கையை தொடங்குவான் கதாநாயகன். அதுபோலவே இந்தக்கதையும் அமைந்திருக்கிறது.
Star Value இல்லாதது ஒரு பெரிய குறை. எத்தனை அழகான பெண்கள் வந்து சென்றபோதிலும் யாருக்கும் பெரிதாக தமது திறமையை வெளிக்காட்ட வாய்ப்பில்லை. அவர்களில் ஒருவர் கூட நம் மனதில் நிற்கவில்லை. விஜய் ஆண்டனியே படம் முழுக்க வியாபித்திருக்கிறார்.
எத்தனை தவறுகள் செய்தாலும் சாமர்த்தியமாகக் காய் நகர்த்தினால் தப்பிக்க வழியுண்டு என்ற எதிர்மறையான சிந்தனையைத்தான் இந்தப் படம் பதிவு செய்கிறது. திரைப்பட அரங்கை விட்டு வெளியே வரும்போது அதை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு வருவது நல்லது. சின்னப்பயல் www.tamilpaper.net

கருத்துகள் இல்லை: