சனி, 1 செப்டம்பர், 2012

காலடியில் தவழும் ஆட்களின் கட்சியில் ஒரு கவரிமான்

அ.தி.மு.க. கவுன்சிலர் வேட்டிவீச்சு:

Viru New
அ.தி.மு.க. அமைச்சர்களே ‘மூன்றாம்பிறை’ படத்தின் இறுதிக் காட்சியில் கமல்ஹாசன் தாவிய கோலத்தில் சட்டமன்ற போர்டிகோவில் தன்மான சிங்கங்களாக உலாவரும் காலம் இது. அப்படியான கட்சியில் மான உணர்ச்சி அதிகமான நிலையில், கரை வேட்டியை கழற்றி வீசினார் கவுன்சிலர் ஆவுடையப்பன்!
இவர் காரைக்குடி நகராட்சி கவுன்சிலர். நகராட்சி கூட்டத்தில், பெண் நகராட்சித் தலைவர் முன்னிலையில், “என்னுடைய வார்டில், எந்த பணியும் நடக்கவில்லை” எனக்கூறி, கரை வேட்டியை கழற்றி வீசினார் இவர். (பெண் நகராட்சித் தலைவரும், அ.தி.மு.க.தான்)

காரைக்குடி நகராட்சிக் கூட்டம், அ.தி.மு.க., தலைவி கற்பகம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவுடையப்பன், “சொக்கலிங்க செட்டியார், செல்லப்ப செட்டியார் தெருக்களில் கால்வாய் இல்லாததால், கழிவு நீர் தேங்கி உள்ளது. நிதி ஒதுக்கியும், பணி நடக்கவில்லை“ என்றார்.
அதற்கு, அ.தி.மு.க. நகராட்சி தலைவி கற்பகம், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அவரது உறுதிமொழியை நம்ம கவுன்சிலர் நம்பவில்லை போலிருக்கிறது. கூட்டம் முடிந்து வெளியே வந்த கவுன்சிலர், “மக்களுக்கு பயன்படாத இந்தக் கரை வேட்டி, தேவை இல்லை“ என்ற கோஷத்துடன், அவிழ்த்து வீசினார். வேடிக்கை பார்க்கலாம் என்று நின்ற நின்ற நகராட்சித் தலைவி, வேகமாக மாடியிலிருந்து இறங்கி, தன் அறைக்குச் சென்று விட்டார்.
இதையடுத்து தரையில் இருந்த வேட்டியை கையில் எடுத்துக் கொண்ட மற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள், ஆவுடையப்பனை சுற்றி சுற்றி வந்து, வேட்டியை கட்டும்படி கெஞ்சிக் கொண்டு இருந்தனர்.
“சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றேன். ஆசை காட்டி, என்னை அ.தி.மு.க.-வில் இணைத்தனர். என்னுடைய வார்டில், எந்தப் பணியும் நடக்கவில்லை. அலுவலர்களிடம் கூறியும் பலன் இல்லை. என்னை நம்பி ஓட்டளித்த மக்களுக்கு, ஒன்றும் செய்ய முடியவில்லை.
எனக்கு, அல்லது நான் கட்டிய கரை வேட்டிக்கு, மரியாதை இருக்க வேண்டும். இரண்டுக்கும் இல்லாத போது, வேட்டி எதற்கு?” என்று கொதித்த அவர், இறுதியில் கரை வேட்டியை வேண்டா வெறுப்பாக வாங்கி கட்டியபடி புறப்பட்டு சென்றார்.
“காலடியில் தவழும் ஆட்கள் உள்ள கட்சியில் ஒரு கவரிமான்!” என்று பேசியபடி கலைந்து சென்றனர் பொதுமக்கள்.
ஆவுடையப்பன், அ.தி.மு.க. அரசில் அமைச்சராக சான்சே இல்லை!

கருத்துகள் இல்லை: