செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ஆச்சார்யா ராஜினாமா! ஜெயாவுக்கு இது நல்ல சேதியா, கெட்ட சேதியா

Viru News
முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் திடீரென ஒரு அதிரடித் திருப்பம். அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகி வாதாடி வந்த ஆச்சார்யா திடீரென பதவி விலகியுள்ளார். கர்நாடக மாநில உள்துறை செயலாளருக்கு தமது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள ஆச்சார்யா, ‘மன உளைச்சல்’ காரணமாகவே தாம் ராஜினாமா செய்வதாகக் காரணம் குறிப்பிட்டுள்ளார்.
நிஜக்காரணம் பயமா மிரட்டலா என்பது தெரியவில்லை .எதற்கும் வக்கீல் விஜயன் மற்றும் அசிட் விக்டிம் சந்திரகலா போன்றோரிடம் கன்சல்ட் பண்ணவேண்டும் 
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதாவுக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கு பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பதே குற்றச்சாட்டு.

இவ்வழக்கில், இரண்டு கட்ட விசாரணைகள் முடிவடைந்துள்ளன. தற்போது நடைபெறுவது, விதி எண் 313-ம் பிரிவு நடைமுறை. அதில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு, அவர்கள் விளக்கமளிக்க வேண்டும். ஜெயலலிதா கேள்விகளுக்கு பதில் கொடுத்துவிட்டார். சசிகலா பதில் கொடுக்கும் படலம், நாளொரு மேனியும், பொழுதொரு தடங்கலுமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில்தான், மன உளைச்சல் காரணமாக தனது பதவியில் இருந்து விலகுவதாக ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
ஆச்சார்யாவை உச்ச நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு சிறப்பு வழக்கறிஞராக நியமித்தது. இந்த வழக்கில் ஆச்சார்யாவும் நீதிபதி மல்லிகார்ஜூனையாவும் ஜெயலலிதா தரப்புக்கு தொடர்ந்து சிம்மசொப்பனமாக இருந்து வந்தனர். நீதிபதி மல்லிகார்ஜூனையா ஓய்வு பெறவுள்ளார். ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து, இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பான விவாதம் தொடங்கியிருக்கிறது. ஜெயலலிதா தரப்புக்கு இது நல்ல சேதியா, கெட்ட சேதியா என்பது போகப்போகவே தெரியும்.

கருத்துகள் இல்லை: