செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

அசாம் நிவாரணம்: ரூ5 கோடியில் இருந்து ரூ.50,000... பாஜக எம்பிக்களின் "தாராளம்"

அசாம் மாநிலத்தில் இன மோதலால் பாதிக்கப்பட்டோருக்கும் உத்தர்காண்ட் மாநிலத்தில் நிலச்சரிவால் இடம்பெயர்ந்தோருக்கும் உதவுவதற்காக பாஜக எம்.பிக்கள் ஒவ்வொருவரும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ5 கோடியில் ரூ50 ஆயிரம் "மட்டும்" கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாராந்திரக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது பாஜகவின் ராஜ்யசபா எம்.பி.யான வி.பி.சிங் பஹத்னோ, அசாம் இன மோதலில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதிக்காக பாஜக எம்.பிக்கள் தங்களது ஊதியத்திலிருந்து கொடுக்கலாம் என்று யோசனையை தெரிவித்தார். ஆனால் இதனை மற்ற உறுப்பினர்கள் ஏற்கவில்லை. பின்னர் ஒருவழியாக பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ50 ஆயிரத்தை நிவாரண நிதிக்கு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

(ஒரு எம்.பிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ5 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரூ50 ஆயிரத்தை மட்டும் கொடுக்க இத்தனை பெரிய விவாதத்தை நடத்தி முடிவு செய்திருப்பதுதான் பாஜகவின் தாராள மனசு)
பாஜகவின் மற்றொரு உறுப்பினரான பகத்சிங் கோசியாரி, உத்தர்காண்ட் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டோர் நிலைமைகளை விவரித்தார். மற்றொரு எம்பியான ஹரின் பதக், கறுப்பு மணி விவகாரம் பற்றி பேசினார். இதைத் தொடர்ந்து எம்.பிக்கள் கொடுக்கும் நிதியை உத்தர்காண்ட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கும் கொடுக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.
அமர்நாத் யாத்ரீகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அருண் ஜேட்லி விவரித்தார். எதிர்க்கட்சித் தலைவரான சுஸ்மா ஸ்வராஜ், அசாம் மற்றும் மும்பை வன்முறை தொடர்பாக பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வரும் விதம் குறித்து திருப்தி தெரிவித்தார்.
நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் இடம்பெற்றுள்ள பாஜக உறுப்பினர்களை மாற்றியமைப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதேபோல் பகுதி இந்தியாவையே இருட்டில் மூழ்க வைத்த மின்வெட்டு விவகாரம் குறித்து இடதுசாரி உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா பிரச்சனை எழுப்பும்போது அதை ஆதரிக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை: