திங்கள், 13 ஆகஸ்ட், 2012

குடும்பத்திற்கு ஒரு வங்கி கணக்கு வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி:"மத்திய திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானியம், பயனாளிகளை நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்ய, ஒரு குடும்பத்திற்கு, ஒரு வங்கிக் கணக்கு இருப்பதை, பொதுத்துறை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின், நிதி சேவைகள் துறை, பொதுத்துறை வங்கிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், ஏதாவது ஒரு வங்கியில், சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும். அந்த வங்கிக் கணக்குக்கு, இணைய தள வசதியுடன் கூடிய, பணப்பரிமாற்ற வசதியும் இருக்க வேண்டும். எந்தெந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லையோ, அவர்களை வங்கிக் கணக்கு துவக்கச் செய்ய வேண்டும்.
அதற்குச் சமீபத்திய, வாக்காளர் பட்டியலை, வங்கிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எத்தனை வீட்டில் உள்ளவர்கள், வங்கிக் கணக்கு துவக்கியுள்ளனர். சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரத்தை, மாநில அளவில் எடுத்து, ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி, மத்திய நிதி அமைச்சகத்திடம், வங்கிகள் சமர்ப்பிக்க வேண்டும்.கடந்த, 2011ம் ஆண்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி, "நாட்டில் மொத்தம் உள்ள வீடுகளில், 58.7 சதவீத வீடுகளில் வசிப்பவர்கள், வங்கிக் கணக்குகளை கொண்டிருந்தனர். அதாவது, 24.69 கோடி வீடுகளில், 14.48 வீடுகளைச் சேர்ந்தவர்கள், வங்கி சேவை வசதிகளைப் பெற்றிருந்தனர். இன்னும், 10 கோடி வீடுகளில் வசிப்போர், வங்கிக் கணக்குகளை துவக்கவில்லை' என, தெரியவந்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: