ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

ஜேப்பியார் சாட்சிகளை கலைத்து விடுவார்” கோர்ட் தீர்ப்பு

அரசியல் செல்வாக்கு தொழிலதிபர் ஜேப்பியார், தனியார் கல்லூரி கட்டடம் இடிந்து விழுந்து 10 பேர் பலியான வழக்கில் ஜாமின் கோரி செய்த மனுவை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனால், ‘உடனே வெளியே வந்துவிடுவார்’ என்று பரவலாக கூறப்பட்ட ஜேப்பியார், இன்னமும் சிறையில் உள்ளார்.
“கைது செய்யப்படவே மாட்டார். இவரையெல்லாம் தொடக்கூடிய ‘தில்’ இங்கே யாருக்கும் கிடையாது” என்று கூறப்பட்ட அரசியல் செல்வாக்கு தொழிலதிபர் ஜேப்பியாரைதான் கைது செய்து சிறையில் அடைத்தது தமிழக காவல்துறை. விதிகளை மீறி, அனுமதியின்றி தனியார் கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கு அமைத்த போது, சுவர் சரிந்து, பத்து பேர் பலியான குற்றச்சாட்டு இவர்மீது பதிவாகியுள்ளது.

குறிப்பிட்ட தனியார் கல்லூரியின் உரிமையாளர், ஜேப்பியார்.
கட்டடப் பொறியாளர் அண்ணாதுரை, “கல்லூரி தலைவர் ஜேப்பியார், பணியை விரைவாக முடிக்கும்படி கூறியதன் அடிப்படையில், பணியை வேகமாக செய்ய முயன்றபோது, விபத்து ஏற்பட்டது” என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஜேப்பியார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி சோமசேகர், “ஜேப்பியாருக்கு உள்ள செல்வாக்கு காரணமாக, அவருக்கு ஜாமின் அளித்தால் வழக்கு சம்பந்தமான சாட்சிகளை அவர் கலைக்கக் கூடும்” என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.
அதேநேரத்தில், சிறையில் உள்ள ஜேப்பியாரை, முதல் வகுப்பு சிறைக்கு மாற்றக் கோரி, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி, ஜேப்பியாருக்கு முதல் வகுப்பு சிறை அளிக்க உத்தரவிட்டார்.
உள்ளேதான் இருக்கப் போகிறார் என்றால், கொஞ்சம் வசதியாக இருந்துவிட்டு போகட்டுமே!

கருத்துகள் இல்லை: