புதன், 4 ஜூலை, 2012

அழகிரி,அன்பழகன், பரிதி இளம்வழுதி, துரைமுருகனும் 'ஆப்சென்ட்'!

சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மட்டுமல்லாமல் மேலும் சில முன்னணி திமுக தலைவர்களும், இன்றைய சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் பதவியைப் பிடிக்க மு.க.ஸ்டாலினுடன் கடுமையாக மோதி வரும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பங்கேற்கவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பது கூடத் தெரியவில்லை.
இந்தப் போராட்டம் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே புறக்கணிப்பு செய்து வந்தார் அழகிரி. இந்தப் போராட்டம் குறித்த முக்கிய முடிவை எடுத்த செயற்குழுக் கூட்டத்திற்கும் அவர் வரவில்லை. மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கும் போகவில்லை. இப்போது போராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்.

மக்களுக்காக இதுவரை ஒரு போராட்டத்திலும் பங்கேற்காத அழகிரி, இப்போது தனது கட்சிக்காரர்களுக்காக நடந்த போராட்டத்தையும் புறக்கணித்திருப்பது துரதிர்ஷ்டவசமானு.
அழகிரியைப் போலவே திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோரும் போராட்டத்திற்கு வரவில்லை. உடல் நிலை காரணமாக இவர்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல பரிதி இளம்வழுதியும் வரவில்லை. இவர் சமீப காலமாக கட்சித் தலைமையுடன் மோதல் போக்கில் இருந்து வருகிறார்.
மேலும், முன்னாள் அதிமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் வரவில்லை. இவர் மீண்டும் அதிமுகவில் சேர முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெர்மிஷன் கேட்டு ஓலை அனுப்பி காத்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் உள்ளன. அதனால்தான் இவரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இவர்களைத் மற்ற திமுகவினர் அத்தனை பேரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: