வியாழன், 5 ஜூலை, 2012

பத்மநாபசாமி கோவில் 5வது ரகசிய அறை திறக்கப்பட்டது-10 லட்சம் கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல்!

 Rs 10 Lakh Cr Worth Jewells Found Padmanabhaswamytemple
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலின் 5வது ரகசிய அறை கடும் முயற்சிக்குப் பின்னர்திறக்கப்பட்டது. அந்த அறையில் சுமார் 10 லட்சம் கோடி மதிப்பிலான, தங்க, வைர நகைகள் குவிந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவனந்தபுரத்தின் மையத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி அளவுக்கு பொக்கிஷம் குவிந்திருப்பதாகவும், இதை சிலர் அபகரித்து வருவதாகவும், எனவே இதைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அனைத்து அறைகளையும் திறந்து பார்க்க உத்தரவிட்டது. அதன்படி அந்த அறைகள் திறந்து பார்க்கப்பட்டன. அதில் 5வது அறை மட்டும திறக்கப்படாமல் இருந்தது. அதன் பூட்டுக்களைத் திறப்பதில் பெரும் சிக்கல் இருந்ததால் அந்த அறை மட்டும் திறக்காமல் விடப்பட்டிருந்தது. இருப்பினும் மற்ற அறைகளில் இருந்த நகைகள், பொக்கிஷத்தின் மதிப்பு பல லட்சம் கோடி என்று தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது 5வது அறையும் திறக்கப்பட்டு விட்டது. அதன் பூட்டை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் திறந்து உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவினர் உள்ளே சென்று ஆய்வு நடத்துகின்றனர். அந்த அறை முழுக்க தங்க, வைர நகைகள் குவிந்து கிடக்கிறதாம். 300 தங்கக் குடங்கள் உள்ளே வைக்கப்பட்டிருந்தன. அதேபோல பெரிதும் சிறிதுமாக 2000 வைர நகைகள் இருக்கிறதாம். இவற்றை மதிப்பிடும் பணியை முடிக்க 6 மாதம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அங்குள்ள மொத்த நகைகளின் மதிப்பு ரூ. 10 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரே அறையில் இவ்வளவு பெரிய அளவில் நகைகள் குவிந்து கிடப்பதாக வந்துள்ள செய்தியால் மீண்டும் பத்மநாபசாமி கோவில் பரபரப்பாகியுள்ளது.
ரகசிய அறைகள் திறக்கப்பட்டு அங்கு பெருமளவில் பொக்கிஷம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுமே கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது நினைவிருக்கலாம்

கருத்துகள் இல்லை: