புதன், 4 ஜூலை, 2012

ஏழை எம்.எல்.ஏ.,க்களுக்குரூ.20 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், முதல்வர் அகிலேஷ் யாதவ்

லக்னோ:""உ.பி., மாநிலத்தில், கார் வாங்க முடியாத ஏழை எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கார் வாங்கிக் கொள்ளலாம்,'' என, முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
பிரசாரம்: உ.பி.,யில், கடந்த மே மாதம் நடந்த, சட்டசபை தேர்தலையொட்டி நடைபெற்ற பிரசாரத்தின் போது வாக்காளர்களிடையே ஓட்டு சேகரித்த அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆட்சியில், சிலைகளை அமைப்பதற்காக மக்கள் பணம் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது என, கூறி வந்தார். முதல்வராக பொறுப்பேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், மாயாவதி அரசு மேற்கொண்ட ஆடம்பரங்களுக்கெல்லாம் இடம் தரப்பட மாட்டாது; வளர்ச்சிப் பணிகளுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும் என்றும் கூறியிருந்தார்.

ஆடம்பர கார்:இந்நிலையில், கார் வாங்க வசதியற்ற, "ஏழை' எம்.எல்.ஏ.,க்கள், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை, தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வாங்கிக் கொள்ளலாம், இதன் மூலம், தங்கள் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை தடைகளின்றி மேற்கொள்ள முடியும் என்றும் புது விளக்கம் அளித்துள்ளார். மேலும், மேம்பாட்டு நிதியையும், 1 கோடி ரூபாயிலிருந்து, 1.5 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். இதன் மூலம், மக்கள் செலுத்தும் வரி பணத்திலிருந்து, 80 கோடி ரூபாய், அம்மாநில எம்.எல்.ஏ.,க்கள் சொகுசு கார்களை வாங்க பயன்படுத்தப்படவுள்ளது.
மீண்டும் மாயாவதி:இருப்பினும், இந்த நிதியை பயன்படுத்தி கார் வாங்கப் போவதில்லை என, பா.ஜ., தலைவர் லட்சுமி நாராணயன் தெரிவித்துள்ளார்.அகிலேஷ் யாதவின் அறிவிப்பு மூலம், உ.பி.,யில், மீண்டும் ஒரு மாயாவதி அரசு ஏற்பட்டுள்ளது என, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: