ஞாயிறு, 11 டிசம்பர், 2011

அணைக்கு எதிரான போராட்டத்தில் வி.ஆர்.கிருஷ்ண அய்யர்-வைகோ வேதனை!


V R Krishna Iyer
 முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அயர் கலந்து கொண்டது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ண அய்யருக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் நீதிபதியான தாங்கள், இந்த விவகாரத்தில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வைகோ தனது கடிதத்தில்,
கேரளாவில் நடந்த மனித சங்கிலியில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுடன் நீங்கள் கைகோர்த்து நின்ற செய்தியை அறிந்த போது அதிர்ச்சி அடைந்தேன்.

அறிவும், ஆற்றலும் நிறைந்த தாங்கள் முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் உண்மை நிலையில் ஆராய்ந்து உணர்ந்து இருக்கவேண்டும்.

நாங்கள் கேரள மாநிலத்தோடு நட்பு உறவையே விரும்புகிறோம்.ஆனால் தாங்கள் முறையற்ற ஒரு போராட்டத்தில் பங்கு ஏற்றதை அறிந்து வருந்துகிறோம்.

ஒரு நீதிபதியாகிய தாங்கள் 2 மாநிலத்துக்கும் பொதுவாகவே நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார் வைகோ.

மனித உரிமை ஆர்வலரான கிருஷ்ண அய்யர், தூக்குத் தண்டனையை ஒழிக்கக் கோரி நெடுங்காலமாக போராடி வருபவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தவர். இந்த நிலையில் அவர் தமிழகத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் ஈடுபட்டது தமிழகத்தில் வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: