திங்கள், 4 அக்டோபர், 2010

நாடு கடந்த பிரதமர் தெரிவிலும் அடிதடி, உருத்திரகுமாரன் 'தேசியத் தலைவர்' வழியில் மிரட்டல்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வு, வன்முறையில் முடிவுற்றதாகவும், அதன் காரணமாக மக்கள் பிரதிநிதிகள் அமர்வுகளிலிருந்து வெளிநடப்புச் செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அரசியல் யாப்பின் அங்கீகாரத்திற்காகவும்,  அரச அவைக்கான தெரிவுக்காகவும் நடைபெற்ற இரண்டாவது அமர்வு, அமெரிக்காவில் இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக குழப்பத்தில் முடிவுற்றுள்ளது. இதன் காரணமாக நாடு கடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதிகள், தமது அதிருப்தியைப் பதிவு செய்துவிட்டு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அமர்வு நடைபெற்ற மண்டபங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த அமர்வுகளிலிருந்து பல நாடுகளையும் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் வெளியேறியுள்ளதுடன், நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தமது பலத்தை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாரிஸ் நகர அமர்வில் கலந்து கொண்ட 23 பிரதிநிதிகளில் 10 பேரும், லண்டன் நகரில் கலந்து கொண்ட 10 பிரதிநிகளில் 7 பேரும் உட்பட 38 உறுப்பினர்கள் அமர்விலிருந்து வெளியேறியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த அமர்வில் கலந்து கொண்ட வேறொரு பிரதிநிதி கருத்துத் தெரிவிக்கையில், ஜனநாயக முறைப்படி தெரிவான பல வேட்பாளர்களின் தெரிவு இரத்துச் செய்யப்பட்ட நிலையிலும், பல இடங்களில் வேட்பாளாகள் தெரிவு நடைபெறாத நிலையிலும், இந்த அமர்வு பூரணமானதல்ல என்ற கருத்தை வலியுறுத்தி அமர்வை ஒத்தி வைக்கும்படி அவரால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும்  அவரால் முன்வைக்கப்பட்ட ஜனநாயகக் கோட்பாட்டுக்கான கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டதாகவும் அதே கருத்தை வலியுறுத்திய கனடிய மக்கள் பிரதிநிதியான ஈசன் குலசேகரம் அவர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனாலேயே மக்கள் பிரதிநிதிகள் வெளியேற வேண்டி நேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அமர்வின் வாக்கெடுப்புக்களின் போது நியாயமற்ற முறைகளில் புதிய பல கட்டுப்பாடுகள் வேண்டுமென்றே சபாநாயகரால் விதிக்கப்பட்டதாகவும், குறிப்பாக அமர்வுக்கு சமூகமளிக்காதவர்களின் வாக்குகளை ஏற்றுக்கொள்ளுவதில் வேற்றுமை காட்டப்பட்டதாகவும், அச்சுறுத்தல்களையும், வன்முறைகளையும் வேண்டுமென்றே நலன்விரும்பிகளினூடாக ஏவிவிடப்பட்டிருந்தது எனவும் தெரிவித்த வெளிநடப்புச்செய்த உறுப்பினர்கள், இந்த அமர்வையும், ஜனநாயக உரிமைகள் பேணப்படாத வகையில் வரையப்படுகின்ற அரசியல் யாப்பையும் புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி விரைவில் அறியத் தருவதாகவும், தமக்கான நியாயம் கிடைக்காத பட்சத்தில் சட்ட நடவடிக்கை உட்பட்ட பல்வேறு முயற்சிகளில் தாம் ஈடுபடப்போவதாகவும், தம்மைத் தெரிவு செய்த மக்களுக்கும், தமிழீழ மண்ணில் தமது விடிவுக்காக ஏங்கும் தமிழ் மக்களுக்கும் இந்த ஏமாற்றமான நிலை குறித்து விளக்கம் கொடுக்கவுள்ளதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதிகளான அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: