வியாழன், 16 செப்டம்பர், 2021

சமூக நீதி - கண்காணிக்கக் குழு: முதல்வர் மு க ஸ்டாலின் !

 மின்னம்பலம் : தமிழ்நாட்டில் சமூக நீதி செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, பணி நியமனம் ஆகியவற்றில் சமூக நீதியின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டு வழங்கப்படுகின்றன.
ஆனால் இந்த சமூக நீதி நடவடிக்கைகள் சரிவர பின்பற்றுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சமூக நீதி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செப்டம்பர் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திராவிட இயக்கம் என்பது சாமானியர்கள் உயர்வதற்காக, சாமானியர்களால் சரித்திரம் படைக்கப்பட்ட, தொடர்ந்து படைக்கப்படும் உயரிய வரலாற்றைக் கொண்டது” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த வரலாறு இன்று நேற்றல்ல; நூற்றாண்டுத் தொடர்ச்சியைக் கொண்டது.


1916 ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரால் தொடங்கப்பட்ட நீதிக்கட்சியானது அன்றைய சென்னை மாகாணத்தில் சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோர் உரிமை, சுயாட்சிக் கருத்துகள் ஆகியவற்றுக்காக குரல் கொடுத்தது. 1920 ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் வென்ற நீதிக்கட்சி ஆட்சியானது இதனை பல்வேறு அரசாணைகள் மூலமாகச் செயல்படுத்தியது.

அதில் மிகமிக முக்கியமான அரசாணை வெளியிடப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகிறது. அதுதான் தமிழ்ச்சமுதாயத்தின் பல தலைமுறைகளை மாற்றிய சமூகநீதி அரசாணை ஆகும். 16.9.1921 ஆம் நாள் அன்றைய நீதிக்கட்சி ஆட்சியின் முதலமைச்சரான பனகல் அரசர் காலத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “அரசுப்பணிகளில் குறிப்பிட்ட வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமானால் அது நாட்டுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும். அனைத்துச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற அடித்தளத்தில் அந்த அரசாணை வெளியிடப்பட்டது.

இதுதான் சமூகநீதிக்கான அடித்தளம் ஆகும். அதிலிருந்துதான் சமூகநீதி வரலாற்றின் மாபெரும் பயணம் தொடங்கியது.

இந்த சமூகநீதி அரசாணையானது தமிழ்நாடு எல்லையைக் கடந்து இந்தியா முழுவதும் இன்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இத்தகைய அகில இந்தியப் புரட்சிக்குக் காரணமான அனைவரையும் இந்த நேரத்தில் வணங்குகிறேன். திராவிட முன்னேற்றக் கழக அரசானது, இத்தகைய சமூகநீதிப் பயணத்தின் அடுத்தகட்டத்தை இன்று முதல் அறிமுகம் செய்ய இருக்கிறது.

சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி இருக்கிறது. ஆனால் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க முடிவெடுத்துள்ளோம். கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக, முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இக்குழு கண்காணிக்கும்; வழிகாட்டும்; செயல்படுத்தும்; அவ்வாறு சரியாக நடைமுறைப்படுத்தபடாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்யும். இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

இதில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள். சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளில் கண்காணிப்புக்குழுவை அமைப்பதில் பெருமை அடைகிறேன். சமூகநீதி எல்லோர்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நடக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

-வினிதா


கருத்துகள் இல்லை: