சனி, 18 செப்டம்பர், 2021

திருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... - பொதுமக்கள் பெரும் வரவேற்பு!

கலைஞர் செய்திகள் : மதுரை கோரிப்பாளையம் பகுதியில் திருநங்கைகள் திறந்துள்ள உணவகம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமூகத்தில் திருநங்கைகள் மீதான பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மதுரை கோரிப்பாளையத்தில் உணவகத்தை திறந்துள்ளார் திருநங்கை ஜெயசித்ரா.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே உணவு சமைத்து சிறிய நிகழ்வுகளுக்கு வழங்கிவந்த ஜெயசித்ரா, சக திருநங்களைகளுடன் இணைந்து ‘டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் உணவகத்தைத் திறந்துள்ளார்.
இந்த உணவகத்தில் உணவு சமைத்தல், பரிமாறுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் திருநங்கைகளே ஈடுபடுகின்றனர். இந்த உணவகத்தில் 12 திருநங்கைகள் பணியாற்றுகின்றனர்.
திருநங்கைகளின் இந்த அசத்தலான முயற்சியை பாராட்டும் வகையில் நேற்று இந்த உணவகத்தை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நேரில் வந்து திறந்துவைத்தார்.


திருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... திறந்துவைத்த மதுரை ஆட்சியர் - பொதுமக்கள் பெரும் வரவேற்பு!

காலையில் இட்லி, பொங்கல், பூரி, தோசை, வடை காபி, டீ உள்ளிட்டவையும், மதியம் சாப்பாடு, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் குழம்பு, சைவ சாப்பாடு உள்ளிட்டவையும், இரவில் சப்பாத்தி, இட்லி, தோசை, பரோட்டா உள்ளிட்டவையும் இங்கு கிடைக்கின்றன.

இந்த உணவகம் குறித்து நம்பிக்கையுடன் பேசியுள்ள ஜெயசித்ரா கூறுகையில், “இந்த உணவகத்திற்கு மக்கள் அளிக்கும் ஆதரவு மூலம் அடுத்தடுத்து உணவகங்கள் திறக்கப்படும். அதன் மூலம் பல திருநங்கைகளின் வாழ்வாதாரம் முன்னேறும்” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: