வெள்ளி, 17 செப்டம்பர், 2021

ஷகீலா மட்டும் இல்லைன்னா அன்னைக்கே.. மேடையில் கண்ணீர் விட்டு கதறிய அங்காடி தெரு சிந்து!

  Mari S -  tamil.filmibeat.com : சென்னை: ஷகீலா அக்கா மட்டும் இல்லைன்னா நான் இப்போ உயிரோடவே இருந்திருக்க மாட்டேன் என மேடையில் கண்ணீர் மல்க நடிகை அங்காடி தெரு சிந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான படம் அங்காடித் தெரு.
அந்த படத்தில் மகேஷ், அஞ்சலி உடன் சிந்துவும் நடித்திருந்தார்.
மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு சிகிச்சை அளிக்க நிதி தேவைப்பட்ட நிலையில், நடிகை ஷகீலா செய்த உதவியை மறக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
அங்காடித் தெரு படத்தின் மூலம் பிரபலமான நடிகை சிந்து ஏகப்பட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிந்து மிகவும் அவதிப்பட்டார். பல பிரபலங்களிடமும் உதவி கேட்டும் யாரும் உதவ முன் வரவில்லையாம்.
முதல் முறை கீமோ தெரபி சிகிச்சை செய்யப்பட்ட போது தான் ஏமாற்றப்பட்டதாகவும் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிட்டதாகவும்,
அடுத்ததாக இரண்டாம் முறை கீமோ தெரபி சிகிச்சை செய்து கொள்ள சினிமா பிரபலங்களிடம் உதவி கேட்ட நிலையில், பலரும் கை விரித்து விட்டனர் என்றார்.


சமீபத்தில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷகீலா மேடையில் பேசும் போது பல தடைகளை கடந்து இந்த இடத்திற்கு சிந்து வந்திருப்பது முழுக்க முழுக்க அவரது முயற்சியால் தான் என பாராட்டி பேசினார். உடனே மைக்கை வாங்கி பேசிய அங்காடி தெரு சிந்து ஷகீலா செய்த உதவி குறித்து மெய் சிலிர்த்து பேசினார்.

அங்காடி தெரு சிந்து ஷகீலாவின் பேச்சை இடைமறித்து பேசும் போது, ஷகீலா அக்காவின் உதவி இல்லைன்னா நான் இந்நேரம் உயிருடனே இருந்திருக்க மாட்டேன். பலரும் எனக்காக நிதி உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட கூட முன் வராத நிலையில், ஷகீலா அக்கா எனக்காக செய்த உதவியை என்றுமே மறக்க மாட்டேன் என நெகிழ்ந்து பேசினார். கண்ணீர் மல்க நடிகை ஷகீலா சத்தமின்றி செய்த உதவி குறித்து பேசிய நடிகை அங்காடி தெரு சிந்து மேடையிலே அழக்கூடாதுன்னு தான் நினைச்சேன் என கண்ணீர் மல்க அழ ஆரம்பிக்க அருகே இருந்த ஷகீலா அவரை தேற்றிய வீடியோ நம்முடைய தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது

கருத்துகள் இல்லை: