செவ்வாய், 7 ஜனவரி, 2020

அதிமுகவில் இருந்து 2 இலட்சம் பேர் திமுகவில் இணைய முடிவு ... அதிர்ச்சியில் அதிமுக!

dmkநக்கீரன் : தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான  உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என  2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ஒன்றிய கவுன்சிலரில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் கைப்பற்றியது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றதையடுத்து ராஜகண்ணப்பன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. எனது தலைமையில் சுமார் 2 லட்சம் பேர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளோம்.

இந்த இணைப்பு விழா மதுரையில் மிக பிரமாண்டமாக வருகிற பிப்ரவரி மாதம் இறுதியில் நடைபெறும் என தெரிவித்தார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சியாக அதிமுக இருந்தும் தோல்வி அடைந்ததால் வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலால் சீட் கிடைக்காதவர்கள் அதிமுகவை விட்டு வெளியேறவும் தயாராகி வருவதாகவும் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை: