திங்கள், 6 ஜனவரி, 2020

அணு ஒப்பந்தங்களில் இருந்து ஈரான் விலகல்!

மின்னம்பலம் : ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் மோதல் போக்கைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு உலக நாடுகளுடன் செய்துகொண்ட அணு சக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ஈரான்.
அணு ஒப்பந்தங்களில் இருந்து ஈரான் விலகல்!இதன் மூலம் யுரேனிய வளத்தைப் பயன்படுத்துவதில் தனக்கு இனி கட்டுப்பாடுகள் இருக்காது என்றும், ஆனாலும் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்புக் குழுவுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் அதிபர் ஹசன் ரொஹானியின் இந்த முடிவு நேற்று (ஜனவரி 5) ஈரானின் அரசு தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது.
தனது நாட்டின் அணுசக்தி பணிகள் தொடர்பான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த வரம்புகளையும் ஈரான் மதிக்காது. எந்தவொரு அணுசக்தி செறிவூட்டலையும் வரம்புகள் இன்றி அதன் தொழில்நுட்ப தேவைகளின் அடிப்படையில் ஈரான் தொடரும் என்று அரசு தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளி (ஜனவரி 3) பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை ட்ரோன் தாக்குதலில் ஈரானிய உயர்மட்ட ராணுவத் தளபதி கஸ்ஸெம் சோலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் - அமெரிக்கா இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஈரான் ஏற்கனவே அதன் அணுசக்தி நடவடிக்கைகளுக்கான பல கட்டுப்பாடுகளை மீறியுள்ளது என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
ஈரானின் 52 இடங்களைக் குறிவைத்து தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரிலேயே நேரடியாக மிரட்டல் அறிக்கை வெளியிட்ட நிலையில்தான் நேற்று ஈரான் அணு விவகாரத்தில் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கிறது.
இதனிடையே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் நேற்று (ஜனவரி 5) ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவாத் ஷாரிப்புடனும், அமெரிக்க அரசின் அரசியல் துறை செயலாளர் மைக் போம்பியோ வுடனும் தொலைபேசியில் பேசினார். வளைகுடா பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா அக்கறை கொண்டிருக்கிறது. இது தொடர்பாக ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் பேசினேன் என்று ஜெயசங்கர் தனது ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் மட்டுமல்லாமல் ஓமன், சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்களுடனும் ஜெய்சங்கர் வளைகுடா மண்டலத்தின் நிலைமை பற்றி ஆலோசனை நடத்தினார்.

கருத்துகள் இல்லை: