சனி, 30 நவம்பர், 2019

ஆவணங்களை ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல்

ஆவணங்களை ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல்மின்னம்பலம் : கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க முடியாது என்று தமிழக அரசின் அரசாணைக்குப் பொன்.மாணிக்கவேல் பதில் தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் 2018ல் சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிலை கடத்தல் சிறப்புப் பிரிவுக்கு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறி அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.அதுபோன்று பொன் மாணிக்கவேலுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டி வந்தது. இதற்கிடையில் 30ஆம் தேதியுடன் தனது பணிக்காலம் முடிவடைவதையொட்டி, பணிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதைவிசாரித்த நீதிமன்றம் வழக்கை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுபோன்று அவரது பணி நீட்டிப்புக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் நேற்று உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஓய்வுபெறும் முன் இறுதியாகப் பொன் மாணிக்கவேலைச் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
அதில், 1-12-2018 முதல் 30-11-2019 வரையிலான பொன்.மாணிக்கவேலின் பணிக்காலம் நிறைவடைவதையொட்டி, சட்டம் ஒழுங்கு டிஜிபி பரிந்துரையின் பேரில் அவரை விடுவித்து உத்தரவிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொன்.மாணிக்கவேல் விசாரணை ஆவணங்கள், அறிக்கைகள் ஆகியவை அனைத்தையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்க்குமார் சிங் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசின் உத்தரவுக்கு பதில் கடிதம் எழுதியுள்ள பொன்.மாணிக்கவேல் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் உத்தரவு இல்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டதால் அரசு ஆணை தனக்குப் பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: