சனி, 30 நவம்பர், 2019

மும்பையில் மு.க.ஸ்டாலின் – அதிரும் வட இந்திய அரசியல்* வீடியோ


மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்ற விழாவில் பங்கேற்க, தமிழ்நாட்டில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் விழாவில் பங்கேற்றதும், மும்பையில் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பும் பாஜகவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை சென்ற ஸ்டாலினுக்கு சிவசேனா கட்சியினர் மிக சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். மேளதாளம் முழங்க, விண்ணதிர கோஷமிட்டு ஸ்டாலினை வரவேற்றனர். வெளி மாநில அரசியல் தலைவருக்கு இந்தளவு வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை.
பிரதமர் மோடி உள்பட தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு கூட இந்தளவுக்கு மும்பை மாநில கட்சிகள் வரவேற்பளித்தது இல்லை.
இதற்குமுன், சிவசேனா - திமுக இடையில் பெரிய அளவில் உறவு எதுவும் இருந்தது கிடையாது. தற்போது பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் இரண்டு கட்சிகளும் இணைந்துள்ளன.
தற்போது லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுகதான். அதனால் திமுக தேசிய அளவில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. நேற்று உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவிலும் ஸ்டாலினுக்கு தனியாக மரியாதை அளிக்கப்பட்டது. ஸ்டாலினை சிவசேனா தனியாக கவனித்துக் கொண்டது.
அதனுடன் போட்டிப்போடும் வகையில் தேசியவாத காங்கிரஸ் வரவேற்பளித்து நெருக்கம் காட்டியது.

மமதா, சோனியா, ராகுல் போன்ற பலர் கலந்து கொள்ளாத நிகழ்ச்சியில் ஸ்டாலின் முக்கிய உறுப்பினராகி கவனம் பெற்றார். சிவசேனா உடன் ஸ்டாலின் இணக்கம் ஆகியுள்ளார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டதும், சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, ”வாங்க அண்ணே” என அழைத்து தனது அன்பை வெளிப்படுத்தியதுடன், அவரிடம் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். மேலும், ஸ்டாலினை வாஞ்சையோடு கையை பிடித்து அழைத்துச்சென்று தன் அருகில் அமரவைத்துள்ளார்.
மு.க.ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜுனே கார்கே போன்றோர் பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டனர்.
அதேபோல, சிவாஜி பூங்காவில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ளச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சுலே ஆகியோர் வரவேற்று மேடையில் அமரவைத்தனர்.
மேலும், ஸ்டாலினுக்கு பல அரசியல் தலைவர்களை அறிமுகப்படுத்தி வைத்ததுடன், தவறாமல் அனைவரும் செல்ஃபீ எடுத்துக் கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் அருகில் அமர்ந்த தேசியவாத காங்கிரஸ் முன்னணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரஃபுல் படேல் தமிழக அரசியல் நிலவரம் பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், மஹாராஷ்டிரா அரசியல் பற்றி கேட்டறிந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய 2 விஷயங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது. அதுகுறித்து அறிந்துகொள்ளும் முன்பாக கடந்த பாராளுமன்ற தேர்தல் நிகழ்வுகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
கடந்த லோக்சபா தேர்தலின் போது இந்தியா முழுவதும் உள்ள எதிர்கட்சிகளை ஒன்றுதிரட்டும் பணியில் அப்போதைய ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுப்பட்டு வந்தார். எல்லா மாநில கட்சிகளையும், பாஜகவிற்கு எதிரான கட்சிகளையும் அவர் ஒன்றாக இணைக்க முயன்றார்.
ஒரு வகையில் அவர் வெற்றியும் பெற்றார். ஆனால் டெல்லி, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் எல்லாம் அவரால் எல்லா எதிர்கட்சிகளையும் இணைக்க முடியவில்லை.
ஆனால் இப்போது, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் போன்ற பரம வைரிகளுடன் சேரும் என பாஜக நினைக்கவில்லை.
அரசியல் திருப்பங்களுக்கு எல்லாம் முக்கிய காரணகர்த்தாவாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பார்க்கப்படுகிறார். அவர்தான் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளையும் ஒன்றாக இணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது ஆட்சியமைக்கும் மூன்று கட்சி கூட்டணி தலைவர்களிடம் பேசிய ஸ்டாலின், ”எதிர்கட்சிகளை இணைத்து சரத் பவார் சாதனை படைத்துள்ளார். அவர் நமக்கெல்லாம் புதிய பாதையை போட்டு கொடுத்துள்ளார். சரத் பவாரின் பாதையை எதிர்க்கட்சிகள் நாடு முழுக்க பின்பற்ற வேண்டும்.
பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் இதேபோல் இணைய வேண்டும். பாஜகவை எல்லோரும் சேர்த்து எதிர்த்தால் எளிதாக வெல்ல முடியும். மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை மொத்த இந்திய அரசியலும் பின்பற்ற வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
அது மட்டுமின்றி, ”உத்தவ் தாக்கரே மும்பையில் இருக்கும் பல லட்சம் தமிழர்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். மும்பை தமிழர்களின் பாதுகாப்பு & நலனுக்காக உத்தவ் பணியாற்ற வேண்டும். மும்பையில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். அவர் தன்னுடைய பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்.
மேலும், மாநில சுயாட்சி மீது சிவசேனா கவனம் செலுத்தும் என நம்புகிறேன். மற்ற மாநிலங்களுடன் சிவசேனா ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இதன் மூலம் பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஸ்டாலின் திரட்ட முயன்று வருகிறார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதனால் ஸ்டாலின் பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகளை மட்டுமின்றி பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகளையும் இணைக்க திட்டமிடுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
WhatsApp News

கருத்துகள் இல்லை: