புதன், 27 நவம்பர், 2019

1000 ரூபாய் பொங்கல் பரிசு நாளை மறுநாள் முதல் விநியோகம்- முதல்வர் துவக்கி வைக்கிறார்

மாலைமலர் : அரிசி ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு 1000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை மறுநாள் முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை: பொங்கல் பண்டிகைக்காக இந்த ஆண்டு அரிசி ரேசன் கார்டுகளுக்கு தலா ரூ.1,000 ரொக்கமும், பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக தமிழக அரசு ரூ.2363.13 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுதினம் (நவ.29) துவக்கி வைக்க உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்து, குறிப்பிட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க உள்ளார். இந்த திட்டத்தின்மூலம், அரிசி ரேசன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புத் துண்டு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்படும். சுமார் 2 கோடி ரேஷன் அட்டை தாரர்கள் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1,000 பணம் பெற உள்ளனர்.

கருத்துகள் இல்லை: