செவ்வாய், 26 நவம்பர், 2019

கருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14,000 ஆடுகள்

கருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14,000 ஆடுகள்வீரகேசரி : ருமேனியாவின் கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 14,000க்கும் மேற்பட்ட ஆடுகளை மீட்பதற்கு மீட்புதவியாளர்கள் திணறி வருகின்றனர்.
நாற்புறமும் நிலத்தில் சூழப்பட்ட கருங்கடலில் உள்ள மிடியா என்னும் துறைமுகத்திலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்ட ‘தி குயின் ஹிந்த்’ என்னும் அந்த சரக்கு கப்பல் சிறிது நேரத்திலேயே கவிழ்ந்துவிட்டது. அந்த கப்பலின் உள்ளே இருந்த சிரியாவை சேர்ந்த 22 பணியாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, பல்லாயிரக்கணக்கான ஆடுகளை மீட்கும் பணியில் உள்ளூர் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் ஆகியோர் அடங்கிய கூட்டு மீட்புப்படை ஈடுபட்டுள்ளது.

அருகிலுள்ள மற்றொரு கப்பலை சுற்றி நீந்திக்கொண்டிருந்த சுமார் 32 ஆடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவை பெரும்பாலும் கடலில் மூழ்கியிருக்கும் என்று கருதப்படுகிறது. எனினும், இன்னும் பல ஆடுகள் கடலில் நீந்திக்கொண்டிருப்பதால் அவற்றை மீட்டுவிடலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கப்பல் கவிழ்ந்ததற்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை. ஆடுகளையும், கப்பலை மீட்கும் நடவடிக்கை முடிந்ததும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: