வெள்ளி, 29 நவம்பர், 2019

இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோவில் இடங்கொடுத்த அமரர் பிராசாத் ... ஒட்டகத்துக்கு இடங்கொடுத்த நிலை?


சாவித்திரி கண்ணன் : முதலில் நானும் எல்லோரையும் போல பாரதிராஜா தலைமையில் திரைதுறையினர் நேற்று பிரசாத் ஸ்டுடியோவை
முற்றுகையிட்ட சம்பவத்தை இளையராஜாவுக்கு
ஆதரவான போராட்டம் என்று தான் நினைத்தேன்.
அது மட்டுமின்றி,இவ்வளவு மரியாதைக்குரிய கலைஞர்கள் இதை மீடியாக்களை அழைத்து ரோட்டில் இறங்கியா அணுகவேண்டும்? தனிப்பட்ட முறையில் பாரத்திராஜா உள்ளிட்ட நான்கைந்து பேர் பிரசாத் ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனரை சந்தித்து சுமூகமாக பேசியிருக்கலாம் என்றும் நினைத்தேன்!
ஆனால்,பாரதிராஜா ஸ்டுடியோவிற்கு வெளியே மீடியாக்களிடம் பேசும் போது புரிந்து கொண்டேன் - அவர் நட்பு அடிப்படையில் இளையராஜாவிற்கு பரிந்து பேசிய அதே நேரத்தில், எல்.வி.பிரசாத் என்ற மாபெரும் திரை ஆளுமை இளையராஜாவை மதித்து அந்த இடத்தை பயன்படுத்த அனுமதித்தையும், அது இரு தரப்புக்குமே பெருமை சேர்த்ததையும் நெகிழ்வாக கூறினார்.
45 வருடங்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் தொழில் செய்துவிட்டு ஒரு கலைஞனை நீங்கள் மாற்று இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது செண்டிமெண்டாக அந்த இடத்தை இழப்பதற்கு அவர் மனம் இடம் தர மறுக்கிறது....!

ஆனால்,காலமாற்றம் இன்றைக்கு பல இடங்கள் பல மாற்றங்களை கண்டு வருவது போல..பிரசாத் ஸ்டுடியோவிற்கும் நிலைமை! பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தினர் மிகவும் மரியாதையுடன் எங்களை வரவேற்று பேசினர்.
அவர்கள் நிலை புரிந்து நாங்கள் கால அவகாசம் கேட்டுள்ளோம்.அவர்களும் இசைந்துள்ளனர். நாங்கள் இத்தனை பேர் இளையராஜவிற்காக வந்துள்ளோம்.இதற்கு இளையராஜாவும் தலைவணங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்...” என்றார் பாரதிராஜா!
ஆக,இந்த போராட்ட அணுகுமுறையும்,ஆள் திரட்டலும் இளையராஜாவின் நெருக்குதலுக்காக பாரதிராஜா எடுத்த முன்முயற்சி தான் என்றாலும்,பிரசாத் ஸ்டுடியோ தரப்பு நியாயத்தை தான் புறக்கணித்துவிட முடியாது என்பதை பாரதிராஜா உணர்த்திவிட்டார்.
சாமியார் போலவும்,ஏதோ துறவி போலவும் அவ்வப்போது பேசும் இளையராஜா தன் விஸ்வரூப வளர்ச்சிக்கு வித்திட்ட ஒரு நிறுவனத்தை போலீஸ்,புகார் என்று அலைகழித்ததோடு இப்போது சக கலைஞர்களை தூண்டி,போராடவும் செய்துள்ளார் என நன்கு விளங்குகிறது.
இளையாராஜாவிற்கு இருக்கும் செல்வத்திற்கு அவரே ஒரு மிகப் பெரிய இசை கல்லூரியோடு கூடிய வளாகத்தை , தானே சொந்தமாக உருவாக்கமுடியும்.!
அவருக்கு பின்பு இசைத்துறைக்கு வந்த ஏ.ஆர் ரகுமான் இன்று தனக்கென்று ஒரு இடம் உருவாக்கி நிறைய இளைஞர்களை தூக்கி விட்டுக் கொண்டிருக்கையில், இளையராஜா மட்டும் ஏன் இன்னும் மற்றவர்கள் தன்னை தூக்கி சுமக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ புரியவில்லை

கருத்துகள் இல்லை: