புதன், 27 நவம்பர், 2019

பாக்யராஜூக்கு எதிராக மகளிர் ஆணையம்.. வீடியோ

  மின்னம்பலம : பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்த பாக்யராஜ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
சென்னையில் கருத்துகளை பதிவு செய் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பாக்யராஜ், ”ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது. பெண்கள் வாய்ப்பளிப்பதுதான் தவறுகளுக்கு மூலகாரணம் ஆகிவிடுகிறது. எனவே பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். பொள்ளாச்சியில் தவறு நடந்தது என்றால் அதற்கு பசங்க மட்டுமே காரணமல்ல. பெண்களுடைய பலவீனத்தைச் சரியாகப் பயன்படுத்தி அவர்களைக் கொண்டு சென்றுவிட்டனர். அவன் செய்தது பெரிய தவறென்றால் அந்த வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்த பெண்கள்தான் ரொம்பத் தவறு செய்துவிட்டனர்” என்று பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு பெண்கள் அமைப்பினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாலியல் வன்கொடுமைக்குப் பெண்கள் மீது பழி சுமத்த வேண்டாம் என்று சொல்லி, சொல்லிச் சோர்வாகிவிட்டது. இதுபோன்ற ஒரு மன நிலை நீடித்துக்கொண்டிருப்பதால் தான் பெண்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்,

கண்டிக்கத்தக்க, தவறான கருத்துகளைப் பேசிய பாக்யராஜூக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர மகளிர் ஆணையம் தமிழக மகளிர் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது.
அம்மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் வஸிரெட்டி பத்மா, தமிழக மகளிர் ஆணைய தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாக்யராஜின் பேச்சு பெண்களுக்காகச் செயல்படும் ஆர்வலர்கள், அமைப்புகள், ஆணையங்கள் மற்றும் அரசின் முயற்சிகளைக் காயப்படுத்தும் வகையில் இருக்கிறது. தமிழக பெண்கள் ஆணையம் இந்த பிரச்சினையை அரசு மற்றும் நீதித் துறையின் மிக உயர்ந்த மட்டங்களில் எடுத்து சென்று, பாக்யராஜுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: