செவ்வாய், 24 செப்டம்பர், 2019

கீழடி என்பது வெறும் Tip of the iceberg தான்... சத்தத்தை குறைத்துவிட்டு இன்னும் ஆழமாக தோண்டுவோம்!.


Karthikeyan Fastura ; கீழடி என்பது வெறும் Tip of the iceberg தான். வைகை
தோன்றிய இடத்தில் இருந்து அது கலக்கும் இடம் வரைக்கும் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் இடங்கள் 200க்கும் அதிகம். அதில் கீழடி தொல்பொருள் ஆய்வுக்கு மிக மிக உகந்த இடமாக இருந்ததால் அங்கு முதலில் ஆரம்பிக்கப்பட்டது.
பசுமை நடை சார்பாக நடந்த கீழடியில் நிகழ்ந்த கூடுகையில் இருமுறை குடும்பத்துடன் பங்கேற்றிருக்கிறேன். அதன் பிறகு பசுமைநடையின் நூறாவது நடை பெருவிழாவே ஒரு தொல்லியல் திருவிழாவாக, ஆய்வு நிகழ்வாக தான் நடந்தது. அப்போது அமர்நாத் ராமகிருஷ்ணன், ஓடிஸா பாலு, ட்ராட்ஸ்கி மருது உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்கள் கலந்துகொண்டு மிக விரிவாக பேசினார்கள். அப்போதே அவர்கள் குறிப்பிட்டது தான் அங்கு எந்தவித மத சின்னங்களும் இல்லை என்று.
எழுத்தாளர் சமூகசெயல்பாட்டாளர் முத்துகிருஷ்ணன் இந்த நிகழ்வை எந்தவித பெரிய நிதி ஆதாரம் இன்றி மிகுந்த சிரமங்களுக்கு இடையில் நடத்தினார். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய, தமிழ் பல்கலைகழகம் செய்ய வேண்டிய, உலகத் தமிழ் சங்கம் செய்ய வேண்டிய ஒரு பெரும் நிகழ்வை ஒரு சிறு குழுவினர் உதவியுடன் பொது மக்களுக்கு
கொண்டு சேர்த்தார். எந்த கட்டணமும் இன்றி உணவு பரிமாறி இந்த நிகழ்வை செய்வதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம். அன்று இதைப் பற்றி ஒரு டிவி நிகழ்ச்சியிலும் வந்த ஞாபகம் இல்லை.

நமது பத்திரிக்கையாளர்களுக்கு போதிய அறிவுத் தேடல் கிடையாது. மாறாக செய்தி தேடல் அதிலும் எதிர்மறை செய்தி தேடல்களை கொண்டு செல்லும் திறன் தான் இருக்கிறது. அது தான் ஊக்குவிக்கப்படுகிறது. இதில் விதிவிலக்குகள் உண்டு தான். ஆனாலும் அது போதாது.
அன்று இந்த நிகழ்வு குறித்து சிறிய பதிவை பதிந்திருந்தேன். ஆய்வாளர்கள் பலரும் இதில் பல ஆச்சர்யமான தகவல்களை பதிந்திருந்தார்கள். நான் ஆச்சர்யம் கொண்டது பெண்கள் மற்றும் சிறார்களின் விளையாட்டு பொருட்கள் மேல் தான்.
கீழடி ஆய்வு மிக மிக முக்கியமானது எதனால் என்றால் அங்கு எந்த அரசர்களை பற்றிய குறிப்புகளும் கிடையாது. பொது மக்கள், வணிகங்கள் பற்றிய தரவுகளை தாண்டி வேறு எதுவும் கிடைக்கவில்லை. அங்குள்ள பளிங்கு பானைகள், யானை தந்தங்களில் செய்த ஆபரணங்கள், உபகரணங்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் கிடைத்தவற்றுடன் ஒத்து போகிறது. கடல் வாணிகம் மிகவும் தொன்மையாக இருந்திருக்கிறது என்பதை காட்டுகிறது.
இந்த ஆய்வுகள் நடத்தும்போது பல பல இன்னல்களை இந்த குழுவினர் சந்தித்துள்ளனர். அரசியல், சமூக, பொருளாதார, சூழலியல் பிரச்சனைகள் போதாதென்று வானிலை பிரச்சனைகள் வேறு. பல சமயம் மழை பெய்து மண் சரிந்து திரும்பவும் முதல் கட்டத்தில் இருந்து ஆரம்பிக்க வைக்கும்.
கீழடி நதி நாகரிகத்தின் வெளிப்பாடு, அதற்கும் முன்பு வனங்களிலும், மலைக்குகைகளிலும் மனிதர்கள் வாழ்ந்த தடம் இருக்கிறது. தமிழகத்தை தாண்டி இலங்கையை சேப்பியன்ஸ் கூட்டம் சேர்ந்தது 35,000 ஆண்டுகளுக்கு முன்பு என்று அங்குள்ள குகை ஓவியங்கள் சொல்கின்றது. அப்படியானால் தென்னகத்தில் குடியேறிய முதல் மனிதர்கள் அவர்தம் வாழ்க்கை முறை பற்றிய ஆய்வு முடிவுகள் எப்போது நமக்கு கிடைக்கும். இந்தியாவில் சேப்பியன்ஸ் வந்து சேர்ந்தது 70,000 வருடங்களுக்கு முன்பு. அப்படிபார்கையில் நமக்கு கிடைத்திருக்கும் இந்த ஆதாரங்கள் மிக மிக அண்மையில் நிகழ்ந்த குடியேற்றத்தை பற்றி தான் பேசுகிறது. அதற்கும் முன்பாக நாம் செல்ல வேண்டிய தூரம் மிக மிக அதிகமாக இருக்கிறது. நூறு கிமீ செல்ல வேண்டிய தூரத்தில் கீழடி என்பது 3.5கிமீ தான் சென்றது போலத் தான்.
அதற்கு மிகப்பெரிய அளவில் ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். தொல்லியல் துறைக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்து ஆய்வு செய்தால் மட்டுமே இதனை நிகழ்த்த முடியும். அவ்வாறு நிகழும் பட்சத்தில் கிடைக்கும் முடிவுகள் மனித குல வரலாற்றையே திருத்தி எழுத வைக்கும். குறிப்பாக இந்திய துணை கண்டத்தின் வரலாறு முற்றிலும் மாற்றி எழுதப்பட வாய்ப்பிருக்கிறது.
கீழடி ஆய்வை திராவிடர்கள் என்றோ, தமிழர்கள் என்றோ சுருக்கிவிட கூடாது. மனிதகுல வரலாற்றின் மிக சமிபத்திய எச்சமாக தான் பார்க்கவேண்டும். ஏனென்றால் ரெம்பவும் உள்ளே உள்ளே செல்லத்தான் இனங்கள் மறைந்து சேப்பியன்ஸ் தெரிவான். அவன் தான் இந்த உலகை 65000 ஆண்டுகள் ஆண்ட பேரினம். கீழடி மனிதர்கள் உள்ளிட்ட நாமெல்லாம் இப்ப வந்தவங்க. பொடியன்ஸ். இன்றும் நாம் சேப்பியன்ஸ் என்ற விலங்கினம் தான். அதை மறந்துவிட்டோம். அவ்வளவே.
ஆகவே சத்தத்தை குறைத்துவிட்டு இன்னும் ஆழமாக தோண்டுவோம்.

கருத்துகள் இல்லை: