சனி, 28 செப்டம்பர், 2019

ஸ்டாலினின் : புதிய பாடத்திட்டத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டம்!

ஸ்டாலினின் அடுத்த போராட்டம்!மின்னம்பலம் : குரூப்-2 புதிய
பாடத்திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
குரூப்-2 பணிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று கட்டங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துகிறது. முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகியவை இடம்பெறும். இந்நிலையில் இதுவரை தனிப் பகுதியாக இருந்த மொழிப்பாடம், முதல்நிலைத் தேர்விலிருந்து நீக்கப்படுவதாகவும், மொழித் தாளுக்குப் பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலையில்லாமல் தவிக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலக் கனவுக்கு அடிப்படையாக டிஎன்பிஎஸ்சி திகழ்கிறது. க்ரூப்-2 பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வில் தமிழ்மொழித் தேர்வை நீக்கியிருப்பதால், கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள ஏழை மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் ஆபத்து சூழ்ந்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு, இனிமேல் வேலை இல்லை என்று, புதிய பாடத்திட்டத்தைக் கொண்டு வருகிறார்” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், “தமிழக அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வி பயின்று- குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து வந்து வேலை தேடும் தமிழக இளைஞர்களை விரட்டியடிக்கும் உள் நோக்கத்துடன் அதிமுக அரசு இந்த புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,
“தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும்”, “ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும்” மொழி பெயர்ப்பு செய்வதற்கு 100 மதிப்பெண்கள் என நிர்ணயித்துள்ள பார்ட்- ஏ தேர்வில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண் எடுக்காவிட்டால் - அந்த இளைஞர் 200 மதிப்பெண்களுக்கு எழுதிய “பார்ட்-பி” விடைத்தாள் திருத்தப்பட மாட்டாது. “தமிழ்மொழித் தேர்வு ரத்து”, “மொழி பெயர்ப்புக்கு மதிப்பெண்” ஆகிய கெடுபிடிகள் மூலம், இன்டர்வியூ உள்ள க்ரூப்-2 பதவிகளில் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத பேராபத்தினை உருவாக்கியுள்ளது அதிமுக அரசு என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், “தமிழ்மொழிக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த க்ரூப் 2, 2A பதவிகளுக்கான புதிய பாடத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்தப் பாடத் திட்டத்தை உடனடியாக முதல்வர் திரும்பப் பெறாவிடில் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களைத் திரட்டி- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்பும், மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” என்று தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: