சனி, 28 செப்டம்பர், 2019

சமஸ்கிருதத்தின் தொன்மை பற்றி உருப்படியான ஒரு சான்று இதுவரை கிடையாது .. கட்டுக்கதைகளே அதிகம் ..

Nagaraja Chozhan MA :; சம்ஸ்க்ருதம் மற்றும் அதன் தொன்மை பற்றி இணையத்தில் தேடினால் சரியான தகவல்களைப் பெற முடியவில்லை. முற்றிலும் அறிவியலுக்குப் (pseudo science) புறம்பான தகவல்களால் தான் நிரம்பி உள்ளது. இந்திய மொழியியல் (linguistics), தொல்லியல் (arechealogy) வல்லுநர்கள் கூட அனுமானங்களையே சொல்லி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சம்ஸ்க்ருதம் எப்படி உருவாகியது என்பதற்கு, சிவபெருமான் உடுக்கையில் இருந்து வலது புறம் சம்ஸ்க்ருதமும் இடது புறம் தமிழும் உருவானதாக சொல்கிறார்கள். இது அறிவியலுக்கும் மொழியியலுக்கும் புறம்பானது.
ஒரு மொழி என்பது முதலில் மக்களால் நூற்றாண்டுகளாகப் பல இன/குடி மக்கள் பேசி அதன் பின் எழுத்து உருவாகி பின் எழுதப்பட்டு, செழுமைப்படுத்தப்பட்டு, இலக்கணங்கள் உருவாகி அதன்பின் இலக்கியங்கள், காப்பியங்கள் உருவாகி இருக்கும். ஆனால் வேதகால சம்ஸ்க்ருதம் உருவாகி 10000 ஆண்டுகள் இருக்கும், அது வாய்மொழி வழியாகவே பல ஆயிரம் ஆண்டுகள் கடத்தப்பட்டது என சமய அறிஞர்கள் சொல்வதை ஆய்வாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
எந்த ஒரு பழமையான மொழியும், ஹீப்ரு, தமிழ், கிரேக்கம் போன்றவை எழுத்துருக்களை சம்ஸ்க்ருதத்திற்கு முன்னரே பெற்றுக் கொண்டன. அஃதாவது அந்த மொழிகளுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான கல்வெட்டுக்கள், பானைகள், தாழிகள், பழங்காலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால் சம்ஸ்க்ருதத்திற்கு கிமு முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டுத் தான் கிடைத்திருக்கிறது. கிடைத்த மற்ற கல்வெட்டுக்கள் எல்லாமே கிபியில் எழுதப்பட்டவை தான்.
சமீபத்திய ராக்கிகடி (Rakhigarhi) டிஎன்ஏ ஆய்வின் முடிவில், சிந்துசமவெளி நாகரிக மக்களின் டிஎன்ஏவில் மத்திய ஆசிய மக்களின் ஸ்டெப்பி (steppe) கலப்பு இல்லை என உறுதியாகியுள்ளது.
ஆகவே சிந்துசமவெளி மக்களுக்கும் வேதகால நாகரிகம்/சம்ஸ்க்ருதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இதை மேலும் உறுதியாக்க வேத காலத்தில் சொல்லப்பட்ட குதிரை & ஆரம் வைத்த சக்கரங்கள் (spokes wheel) கொண்ட தேர் போன்றவை சிந்துசமவெளி மட்டுமல்ல, கீழடி முதலான மற்ற இடங்களிலும் கிடைக்கவில்லை. இவை எல்லாமே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்ட்டவை. அடுத்து, சம்ஸ்க்ருதம், தமிழைப் போல ஒரு இந்திய மொழி அல்ல, அது இந்தோ-ஐரோப்பிய (Indo-Europhian) மொழி. அஃதாவது மத்திய ஆசியாவில் (Central Asia, current Iran, Syria) தோன்றி இந்தியாவிற்குள் வந்தது. குதிரை, தேர் போன்றவை மத்திய ஆசியாவில் தான் பயன்படுத்தப்பட்டன. மேலும் சிந்துசமவெளி பகுதியில் காணப்பட்ட காண்டாமிருகத்திற்கு சம்ஸ்க்ருதத்தில் சொல் இல்லை.
சம்ஸ்க்ருதம் பழங்கால நாகரிகம் முதற்கொண்டு எந்த இன, குழு மக்களுக்கும் தாய்மொழியாக இருந்தது இல்லை. சம்ஸ்க்ருதம் என்ற சொல்லுக்கு 'செம்மைப் படுத்தப்பட்ட' என்று பொருள். பிராகிருதம் என்ற சொல்லுக்கு 'மூலம்' (source) என்று பொருள். பிராகிருத மொழியை செம்மைப்படுத்தி மந்திரங்கள், அறிவியல், மற்றும் இலக்கியங்களுக்குப் பயன்படுத்தி இருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். மேலும் மஹாபாரதம், ராமாயணம் போன்றவை கற்பனையான படைப்புகளே அன்றி நிஜத்தில் நடந்தவை அல்ல என்பதுவும் ஆய்வாளர்கள் கூற்று. இதுவரை மஹாபாரதம், ராமாயணம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பது இங்கே கணக்கில் கொள்ளப்பட வேண்டும். வேதகால/சரஸ்வதி நதி நாகாரிகத்தைக் கண்டறிய மத்திய அரசு பல கோடி ரூபாய்களை கடந்த இருபது ஆண்டுகளாகச் செலவு செய்து வருகிறது. மேலும் மஹாபாரதம், ராமாயணம் போன்றவை அலெக்ஸாண்டர் படையெடுப்புக்குப் பின் கிரேக்க காப்பியங்களைத் தழுவி எழுதப்பட்டது என்ற வாதமும் வைக்கப்படுகிறது. புகழ்பெற்ற டிராய் (Troy) கதையில் வரும் சம்பவங்கள் அப்படியே ராமாயணமாக எழுதப்பட்டதாக சொல்கிறார்கள்.
மேலும் சிலர், எகிப்திய Pharaoh Ramesses (1,2 & 3) கதையை அப்படியே ராமாயணமாக எழுதி இருப்பதாக சொல்கிறார்கள். எகிப்திய Ramesses மற்றும் அவர்களின் கதைகள் அப்படியே ராமாயணத்திற்கு பொருந்திப் போகிறது.
மேற்கொண்ட தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, சில கேள்விகள் எழுகிறது.
1. சம்ஸ்க்ருதம் பத்தாயிர வருட பழமை எனும் போது, ஏன் ஒரே ஒரு கல்வெட்டு, முதுமக்கள் தாழி கூட கிமு காலத்தில் கிடைக்கவில்லை? கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற அகழ்விடங்களில் கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட, தமிழில் எழுதப்பட்ட தாழிகள், பானைகள் கிடைத்துள்ளதை போல சம்ஸ்க்ருத மொழியில் ஒரே ஓர் ஆதாரம் கூட கிடைக்கவில்லை? சம்ஸ்க்ருதம் அதற்கு முன்பு பனை ஓலைகளில் எழுதப்பட்டது என்கின்றனர். அப்படி எனில் தமிழ் கூட பனை ஓலைகளில் எழுதப்பட்டது தான். ஆனால் தமிழுக்கு ஏகப்பட்ட புராதான பொருட்கள் கிடைக்கின்றனவே? அப்படி எனில் சம்ஸ்க்ருதம் கிமு மூன்றாம் நூற்றாண்டில் உருவானது தானா? அதாவது மவுரியப் பேரரசின் காலத்தில்.
2. சம்ஸ்க்ருத மொழியில் நேரடியான பிறமொழிக் கலப்பு இல்லை. அஃதாவது அது வேர்ச்சொற்களை (root words) எடுத்துக் கொண்டு சம்ஸ்க்ருதமயமாக்கி விடும். எந்த ஒரு மொழியும் பொது மக்கள் பேசும் போது ஏகப்பட்ட கலப்புகள் ஏற்படும். ஆனால் சம்ஸ்க்ருதத்தில் அது இல்லை. போகவும் அது எந்த ஒரு இனக்குழுவுக்கும், பழங்குடிகளுக்கும் தாய்மொழியாக இருந்தது இல்லை. எனவே இதை இயற்கை மொழி (natural language) அல்ல, C, C++, JAVA போன்று
கட்டமைக்கப்பட்ட மொழி (strucutred language) என்று சொல்லலாமா?
3. வேதகால சம்ஸ்க்ருதம் பல்லாயிரங்கால பழமை என்கின்றனர். ஆனால் வேதகாலம் இருந்ததாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. தற்கால சம்ஸ்க்ருதம் மட்டுமே கணக்கில் கொண்டால், அதன் தோராயமான வயது என்ன?
பின்குறிப்பு:
மதம், மொழி சம்பந்தப்பட்டு இந்தக் கேள்விகள் எழுப்பப்படவில்லை. சம்ஸ்க்ருத மொழியின் தொன்மை குறித்து மட்டுமே எழுதப்பட்டது.
கடவுளின் மொழி, கடவுள், வேதங்கள், உபநிடதங்கள் எல்லாமே அறிவியல் பூர்வமான சாட்சியாக வைக்க முடியாது.
By Nagaraja Chozhan MA

கருத்துகள் இல்லை: