வியாழன், 26 செப்டம்பர், 2019

பொறியியல் படிப்பில் பகவத் கீதை!

பொறியியல் படிப்பில் பகவத் கீதை!மின்னம்பலம் : அண்ணா பல்கலைக் கழக பொறியியல் படிப்பில் பகவத் கீதை பாடம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் 2019ஆம் ஆண்டுக்காக பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தனது புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, தத்துவவியல் படிப்பும், அதில் பகவத் கீதை பாடத்திட்டமும் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், “பொறியியல் மாணவர்களின் மூன்றாவது செமஸ்டரில் தத்துவவியல் பாடம் இடம்பெறும். சென்னையில் உள்ள MIT, CEG,ACT,SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு முதல் தத்துவவியல் படிப்பு அறிமுகமாக உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும (AICTE) அறிவுறுத்தலின்படி இந்த பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தத்துவவியல் பாடத்தில் நான்காவது யூனிட்டில் பகவத் கீதையில் அர்ஜுனருக்கு, கிருஷ்ணர் வழங்கிய போதனை உள்ளிட்டவை பாடமாக இடம்பெற்றுள்ளது. ஆனால், இதற்கு அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 25) தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில், "இந்திய - மேல்நாட்டு தத்துவப் படிப்பு" என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், “பொறியியல் படிப்பில் பகவத் கீதை பாடம் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிரானது. அனைத்து மத மாணவர்களும் படிக்கும் ஒரு படிப்பில் குறிப்பிட்ட மத போதனையை புகுத்துவதும், இதற்கு தமிழக அதிமுக அரசு துணைபோவதும் ஏற்கத்தக்கது அல்ல. இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ கல்வியைக் காவிமயமாக்கும் பாஜக அரசின் சதிச்செயலுக்கு அதிமுக அரசு பலியாகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது. திருக்குறள் எனும் மானுடச் சாசனம் இருக்க, பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் பகவத் கீதையைச் சேர்ப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவவியல் பாடத்தை விருப்பப் பாடமாக மாற்றுவதற்கு அண்ணா பல்கலைக் கழகம் முடிவுசெய்துள்ளது.

கருத்துகள் இல்லை: