திங்கள், 23 செப்டம்பர், 2019

இது இந்திய நீதித்துறைக்கே அவமானம் இல்லையா?

Kiruba Munusamy : கடந்த 10 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு தலித்
நீதிபதி கூட இல்லாத காரணத்தால், பிரதிநிதித்துவம் மற்றும் பன்முகத்தன்மையின் பொருட்டு இம்முறை ஒரு தலித் நீதிபதியாவது உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட வேண்டுமென்று பல்வேறு விவாதங்கள் இருந்துவந்த நிலையில், கடந்த வாரம் 4 பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.
இது ஒருபுறம் இருக்க, மூத்த நீதிபதியான சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமணி அவர்களோ வெறும் மூன்று நீதிபதிகளை மட்டும் கொண்ட உயர் நீதிமன்றமான மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறார். முதல் இந்திய உயர் நீதிமன்றங்களில் ஒன்றானதும், மிகப் பெரியதுமான சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து மேகாலயா போன்ற மிகச் சிறிய நீதிமன்றத்திற்கு மாற்றுவது தண்டனைக்கு இணையானது என்பதால், தனது இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கோரிக்கை விடுக்கிறார். அது மறுக்கப்பட, பதவியை இராஜினாமா செய்கிறார்.
இவரைப்போலவே, மூத்த நீதிபதியும் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியுமான அகில் அப்துல்ஹமீத் குரேஷி முதலில் மத்திய பிரதேச தலைமை நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டு பின்னர் மிகச் சிறிய உயர் நீதிமன்றமான திரிபுராவின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டு, தற்போது தன் பணியிட மாற்றத்தை எதிர்த்து போராடி வருகிறார்.

இவர்களைப்போலவே, கடந்த 2017-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஜெயந்த் படேல் அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் அவரும் இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி கொலீஜியத்தின் ஆட்டத்திற்கு அடிபணியாமல் நீதிபதிகள் எல்லாம் பதவி விலகினால் சுதந்திரமாகவும், பாகுபாடின்றியும் இயங்க வேண்டிய நீதித்துறையின் நிலை என்னவாகும்? இது இந்திய நீதித்துறைக்கே அவமானம் இல்லையா?

கருத்துகள் இல்லை: