வியாழன், 26 செப்டம்பர், 2019

மகனை டாக்டராக்க வேண்டும் என்ற ஆசையில் செய்துவிட்டேன்!' - உதித் சூர்யா தந்தை வாக்குமூலம்

Investigation
vikatan.com : நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக விசாரணை வளையத்திற்குள் இருக்கும் சென்னையைச் சேர்ந்த மாணவன் உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர்கள் சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த உதித் சூர்யாவைக் கைது செய்யத் தேனி தனிப்படை கடந்த வாரம் சென்னை விரைந்தது. குடும்பத்தோடு உதித்சூர்யா தலைமறைவானார். இந்நிலையில், தனிப்படையின் தீவிர தேடுதல் வேட்டையில், நேற்று திருப்பதி மலை அடிவாரத்தில் உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள், நள்ளிரவு 2மணிக்குத் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி விஜயகுமார் தலைமையில், டி.எஸ்.பி ஹாட்வின் ஜெகதீஸ்குமார், தேனி சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் சித்ரா தேவி ஆகியோரது குழுவினர் தொடர் விசாரணை செய்தனர். விசாரணை செய்த போது, தவறு செய்ததை உதித்சூர்யாவும், அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனும் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

இது தொடர்பாகத் தகவல் தெரிவித்த சி.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவர், ``விசாரணையில் இருவரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டனர். அதைத் தனித்தனியாக வாக்குமூலமாகக் கொடுத்தனர். தேனி வி.ஏ.ஓ குமரேசன் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. எனவே இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது உதித்சூர்யா, `எல்லாத்துக்கும் அப்பாதான் காரணம்.! நான் வேண்டாம் என்றுதான் சொன்னேன்!' என்றார். 'மகனை டாக்டர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் இப்படிச் செய்துவிட்டேன்!' என வெங்கடேசன் கூறினார்.

இருவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதால் அடுத்த கட்டமாக, தற்போது தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னர் இருவரையும் ஆஜர் செய்ய இருக்கிறோம். முதல்கட்ட விசாரணையில், உதித்சூர்யாவின் தாயார் கயல்விழிக்கும் இந்தக் குற்றத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனத் தெரியவருகிறது. இருந்தபோதும் தொடர்ந்து விசாரிக்க இருக்கிறோம்!' என்றார்.
தேனி கோர்ட்டில் உதித்சூர்யாவும், வெங்கடேசனும் ஆஜர் செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்கிறது தகவல்

கருத்துகள் இல்லை: