சனி, 28 செப்டம்பர், 2019

துப்புரவு பணிக்கு விண்ணப்பித்த இஞ்சினீயர்கள், பட்டதாரிகள்.. தமிழக அரசு செயலகத்தில்

துப்புரவு பணிக்கு விண்ணப்பித்த இஞ்சினீயர்கள், பட்டதாரிகள்!மின்னம்பலம் : தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் 14 துப்புரவு பணியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு இஞ்சினீயரிங் பட்டதாரிகள் உள்பட 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் 10 பெருக்குபவர்கள், 4 துப்புரவு பணியாளர்கள் என 14 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக கல்வித் தகுதி எதுவும் குறிப்பிடப்படாமல், உடல் வலிமையோடு இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் அந்த அறிவிப்பில், சம்பள விகிதம் ரூ.15,700 முதல் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கல்வித் தகுதியே தேவையில்லாத இந்த பணிகளுக்கு பி.இ., பி.டெக்., எம்.டெக், எம்.இ படித்தவர்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்து 607 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 677 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 3 ஆயிரத்து 930 பேருடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்தது. நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடந்துவருகிறது.

தமிழகத்தில் இஞ்சினீயரிங் மற்றும் பட்டப் படிப்பு படித்த மாணவர்களில் பெரும்பாலானோர் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வேலைநாட்களை குறைத்துவருகின்றன. மேலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது துப்புரவு பணியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளது வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எடுத்துக்காட்டாகவே இருப்பதாக குமுறுகிறார்கள் பட்டதாரிகள்.

கருத்துகள் இல்லை: