வியாழன், 26 செப்டம்பர், 2019

நாங்குநேரியில் காங்கிரஸ் தமிழ்செல்வன் சுயேட்சையாக போட்டியிட போவதாக அறிவிப்பு!

nakkheeran.in - manikandan இடைத்தேர்தல் நடக்கயிருக்கும் நாங்குநேரி தேர்தல் களம் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து வருகிறது. அதிகாரிகளும், காவல்துறையும் இதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் முக்கிய கட்சியான அதிமுகவும் வேட்பாளரை அறிவித்துவிட்டது. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி பிரமுகர்களை சந்தித்து வருவதோடு, அதிமுக தலைமையும் முனுசாமி தலைமையில் தேர்தல் பணிக்குழுவையும் அறிவித்து விட்டது. அடுத்து பிரதான கட்சியான காங்கிரஸ் இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.
ஆனால் அதன் கூட்டணி கட்சியான திமுக நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்காக ஐ.பெரியசாமி தலைமையில் கனிமொழி உட்பட தேர்தல் பணிக்குழுவை அறிவித்து விட்டது. இந்தநிலையில் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நான்கு நாட்களில் சுயேட்சை வேட்பாளர்கள் தச்சநல்லூரை சேர்ந்த ராகவன் மற்றும் எல்லா தேர்தல்களிலும் போட்டியிடும் தேர்தல் மன்னன் பத்மராஜன் ஆகிய இருவர் மட்டும் தான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    
இதற்கிடையில் இன்று நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகம் வந்து சுயேட்சையாக போட்டியிடுவதற்காக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் தமிழ்செல்வன் மனு வாங்கி சென்றார். அப்போது அவர் கூறும் போது,

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் காங்கிரசில் சீட் கேட்டு தலைமைக்கு மனு கொடுத்தோம். அப்போது எங்களிடம் தேர்தலில் போட்டியிட்டு செலவு செய்ய போதுமான அளவுக்கு பணம் இல்லையாம் அதனால் சீட் இல்லையென்று கூறிவிட்டனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு சீட் கொடுக்க வில்லையென்றால் அந்த 8 பேரும் சுயேட்சையாக போட்டியிடுவோம் என்றார். இது நெல்லை மாவட்ட காங்கிரஸ் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: