ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு: செப்., 6 முதல் விடுவித்ததாக மத்திய அரசு அறிவிப்பு

தலைமை நீதிபதி, தஹில் ரமானி, ராஜினாமா, ஏற்பு, மத்திய அரசு, அறிவிப்பு, வினீத் கோத்தாரி  தினமலர் : சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, வி.கே.தஹில் ரமானி ராஜினாமாவை ஏற்று, முறைப்படி மத்திய அரசு அறிவித்துள்ளது.
அவரது ராஜினாமா, செப்., 6ல் இருந்து அமலுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜினாமா ஏற்கப்பட்டதை அடுத்து, தலைமை நீதிபதியின் பணிகளை கவனிக்க, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி, வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக பதவி வகித்த, வி.கே.தஹில் ரமானி, 2018 ஆகஸ்ட்டில்,சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஓராண்டு பணி முடிந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் தலைமையில், 'கொலீஜியம்' கூடி, தஹில் ரமானியை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற முடிவெடுத்தது.மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும், ஏ.கே.மிட்டலை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பது எனவும் தீர்மானித்தது.

இதையடுத்து, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கான இடமாறுதலை மறுபரிசீலனை செய்யக் கோரி, கொலீஜியத்துக்கு, தலைமை நீதிபதி, வி.கே.தஹில் ரமானி மனுஅனுப்பினார். இதை ஏற்க மறுத்த, கொலீஜியம், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாறுதல் செய்வதை, உறுதி செய்தது. அதனால், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, ஏ.கே.மிட்டல் நியமிக்கப்படுவது உறுதியானது.

ஏற்கனவே, கொலீஜியம், இதற்கான பரிந்துரையை, மத்திய அரசு வாயிலாக, ஜனாதிபதிக்கு அனுப்பியது. இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய கோரியதை, கொலீஜியம் நிராகரித்ததை தொடர்ந்து, தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்து, இம்மாதம், 6ம் தேதி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, தஹில் ரமானி கடிதம் அனுப்பினார்.



உறுதி

நீதிபதிகள் சிலர், 6ம் தேதி அளித்த விருந்தின்போது, தன் ராஜினாமா பற்றி, தலைமை நீதிபதி, வி.கே.தஹில் ரமானி தெரிவித்தார். ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி, தலைமை நீதிபதியிடம், சக நீதிபதிகள் கேட்டும், முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.ராஜினாமா கடிதம் அனுப்பியதோடு, உயர் நீதிமன்ற பணிக்கும் வரவில்லை.அவர் தலைமையிலான அமர்வில் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள், இரண்டாவது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டன.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், இந்தியாதிரும்பியவுடன், முதல் கட்டமாக, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, கிருஷ்ணா முராரி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ரவீந்திர பட், ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, வி.ராமசுப்ரமணியன், கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ரிஷிகேஷ் ராய் ஆகியோரும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

நியமனம்

இதற்கான அறிவிப்பாணையை, மத்திய அரசு, இம்மாதம், 18ம் தேதி பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, வி.கே.தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுள்ளதாக, மத்திய அரசு, நேற்று முன்தினம் முறைப்படி அறிவித்தது. அவர் எந்த தேதியில் ராஜினாமா கடிதம் கொடுத்தாரோ, அந்த நாளான, செப்., 6ல் இருந்து, இது அமலுக்கு வந்து விட்டதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

தலைமை நீதிபதி ராஜினாமா குறித்து அறிவிப்பு வெளியானதை அடுத்து, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான, வினீத் கோத்தாரியை, தலைமை நீதிபதியின் பணிகளை செயல்படுத்துவதற்காக, ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். இவர், பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார்.


இன்னும் ஓராண்டு
புதிய தலைமை நீதிபதியாக, ஏ.கே.மிட்டல் பொறுப்பேற்கும் வரை, தலைமை நீதிபதியின் பணிகளை, நீதிபதி, வினீத் கோத்தாரி கவனிப்பார். உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப் பட்ட, புதிய நான்கு நீதிபதிகளும் பொறுப்பேற்ற பின், சென்னை உள்ளிட்ட நான்கு மாநில உயர் நீதிமன்றங்களுக்கும், தலைமை நீதிபதி நியமிக்கப்படுவர். இதற்கான பரிந்துரையை, ஏற்கனவே, கொலீஜியம் அனுப்பி விட்டது.

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக, 2001 ஜூனில் நியமிக்கப்பட்ட, வி.கே.தஹில் ரமானிக்கு, 2020 அக்டோபர் வரை பதவி காலம் உள்ளது. பதவி காலம் முடியும் முன், அவர் ராஜினாமா செய்து உள்ளார்.

கருத்துகள் இல்லை: