ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

இடைத்தேர்தல் - திமுக, அதிமுக மீது டெல்லி அழுத்தம்!

டிஜிட்டல் திண்ணை: இடைத்தேர்தல் - திமுக, அதிமுக மீது டெல்லி அழுத்தம்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. சில நிமிடங்களில் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன. தென்தமிழகம், வடதமிழகம் எனத் தமிழகத்தின் இரு பகுதிகளில் தேர்தல் நடக்கும் நிலையில் தென்மாவட்டங்களில் திமுக, அதிமுக இரண்டும் கூட்டணி நிர்பந்தங்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக திமுக கூட்டணியில் நாங்குநேரி கடைசி நேரத்தில் காங்கிரஸுக்கு போன மர்மத்தை எண்ணி எண்ணி நெல்லை கிழக்கு மாவட்டத் திமுகவினர் கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏனென்றால் சில நாட்களுக்கு முன் நாங்குநேரியில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸால் தனித்துப் போட்டியிட முடியாதா என்பது உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இது சர்ச்சைக்குள்ளான உடன் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் செயல்படுவதுபோல் காட்டுவதற்காக நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரஸ் மாவட்டத் தலைவருக்கே தமிழக காங்கிரஸ் தலைமை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையெல்லாம் கவனித்துவந்த திமுக, நாங்குநேரியில் களமிறங்கிய தீருவது என்று முடிவெடுத்து வைத்திருந்தது. அதற்கேற்ப கடந்த 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் வரை அனைவருடனும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார்.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாளையங்கோட்டை, களக்காடு ஒன்றிய செயலாளர்கள், நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, களக்காடு, ஏர்வாடி, திருக்குறுங்குடி ஆகிய பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரோடும் இரவு பகலாக ஆலோசனை நடத்தினார் ஐ.பெரியசாமி. இதனால் திமுகவின் தேர்தல் வேலைகள் தொடங்கி விட்டதாக காங்கிரஸ் கருதியது.
ஏற்கனவே, காங்கிரஸ் ஜெயித்த தொகுதியில் திமுக போட்டியிட்டால் அது இப்போது இருக்கும் நிலைமையில் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் தமிழக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சியை விட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருப்பவர்கள் மீது மத்திய பாஜக அரசு கடுமையான பாய்ச்சல் நடத்தத் தயாராகிறது. இந்த வகையில் திமுகவை காங்கிரஸிடமிருந்து பிரித்து வைக்க நடக்கும் முயற்சியாகவும் இருக்கலாம். எனவே, திமுக கூட்டணியில் நாங்குநேரியை காங்கிரஸுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைமையிடம் இருந்து டெல்லி தலைமை அழுத்தங்கள் அளிக்கப்பட்டன.
இந்த நிலைமைதான் ஸ்டாலினிடம் டெல்லியில் இருந்து பேசியதன் அடிப்படையில் கடைசி நேரத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு அறிவிக்கப்பட்டடிருக்கிறது நாங்குநேரி. இதனால், திமுக தொண்டர்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த திமுக தொண்டர்களின் எதிர்ப்பார்ப்பைப் பொய்யாக்கும் அறிவிப்பு என்றும் கடைசி வரை காங்கிரஸ் கட்சிக்குத்தான் காவடி தூக்க வேண்டுமா என்றும் சமூக வலைதளங்களில் திமுகவினர் வெளிப்படையாக பொங்கித் தீர்த்து வருகிறார்கள்.
துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியது எதற்காக, ஒவ்வொரு ஒன்றியச் செயலாளர், ஒவ்வொரு ஒன்றியத் துணைச் செயலாளர், ஒன்றியப் பிரதிநிதி, நகரச் செயலாளர், மாவட்டத் தகவல் தொழில்நுட்பத் துறை நிர்வாகிகள் என்று ஒவ்வொருவரிடமும் நாங்குநேரி தொகுதி பற்றி ஆலோசனை நடத்தியது ஏன்? காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதியைக் கொடுப்பதற்காகவா இவ்வளவு பெரிய ஆலோசனைகள் என்று திமுகவுக்குள் குமுறல்கள் வெடித்துள்ளன.
இதேபோல நாங்குநேரியை மையமாகக்கொண்டு அதிமுக கூட்டணியிலும் பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைவதற்கு இதுதான் சரியான தருணம் என்று நினைத்துள்ள பாஜக தென்மாவட்டத்தில் அமைந்திருக்கும் நாங்குநேரி தொகுதியைத் தனக்குத் தரும்படி அதிமுகவிடம் நிர்பந்தித்து வருகிறது. நேற்று மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் வெளியிட்ட செய்தியின்படி, ‘நாங்குநேரியை அதிமுகவிடம் இருந்து பறிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது பாஜக. சட்டமன்றத்தில் உங்களுக்குத் தேவையான நம்பர் இருக்கு. இப்ப நீங்க நாங்குநேரியைக் கொடுத்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் வரப்போவதில்லை. ‌ காங்கிரஸ் தொடர்ந்துவந்த தொகுதிகள் காங்கிரஸை ஒழித்துக்கட்டி பாஜகவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று விரும்புறோம். அதனால தொகுதியை பாஜகவிடம் கொடுத்துடுங்க’ என்று எடப்பாடி பழனிசாமியிடமும், ஓ.பன்னீரிடமும் பாஜக தரப்பில் இருந்து செய்திகள் சொல்லப்பட்டு விட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு நாங்குநேரி ஒதுக்கப்பட்டதுபோல் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் எதிர்பார்ப்பு.
இரண்டு கூட்டணிகளிலும் தேசிய கட்சிகளுக்கு நாங்குநேரி ஒதுக்கிவிட்டு திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் விக்கிரவாண்டியில் மட்டும் கவனம் செலுத்துவது என்றும் ஒரு தரப்பில் பேசப்படுகிறது.
ஆனால், நேற்று அறிவாலயத்தில் திமுக தலைவரைச் சந்தித்த காங்கிரஸ் புள்ளிகள் இதற்கும் ஒரு செக் வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஸ்டாலினிடம், ‘நீங்க நாங்குநேரியை எங்களுக்கு கொடுத்திட்டீங்க. ஆனா திமுகவின் அனைத்து நிர்வாகிகளும் இடைத்தேர்தல் வேலை செய்வதற்கு நாங்குநேரியா, விக்கிரவாண்டியா என்று கேட்டால் விக்கிரவாண்டி தான் முடிவு செய்வார்கள்.
எனவே தென்தமிழகத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளை நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான் கூட்டணி முறையாகச் செயல்பட முடியும். தொகுதியை மட்டும் எங்களுக்கு கொடுத்துவிட்டு தென்மாவட்ட திமுக நிர்வாகிகள் எல்லாம் விக்கிரவாண்டி சென்று வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால், தொகுதியைக் கொடுத்ததற்கே பயனில்லாமல் போய்விடும்’ என்று ஸ்டாலினிடம் ஒரு கருத்தை முன்வைத்துள்ளனர். அதற்கு அவர் பார்ப்போம் என்று பதில் சொல்லியுள்ளார். தேசியக் கட்சிகளின் பார்வையில் தென்மாவட்ட நாங்குநேரியும், திராவிடக் கட்சிகளின் பார்வையில் வடமாவட்ட விக்கிரவாண்டியும் இருக்கின்றன” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை: