வியாழன், 26 செப்டம்பர், 2019

பொறியியலில் இந்துத்வாவை திணிக்க்கும் மத்திய மாநில அரசுகள் .. ஹிந்தியை திணிப்பதை விட இது இலகுவாம் ..

sdhபகவத் கீதை சர்ச்சை ஒருபுறம்... பொறியியலில் என்னென்ன புதிய பாடப்பிரிவுகள் உள்ளது தெரியுமா..? 
ghநக்கீரன் : சில வாரங்களுக்கு முன் ஹிந்தி தின விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டின் தேசிய மொழியாக ஒருமொழி இருந்தால் நாடு வளரச்சி அடையும், கலாச்சாரம் வளரும் என்று தெரிவித்திருந்தார். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு எழவே, நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை என்று அமித்ஷா பல்டியடித்தார்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு தினங்கள் முன்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்த புதிய பாடப்பிரிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்படி, புதிதாக தத்துவவியல் படிப்பு அறிமுகப்படுத்தபடுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்தது. அதில் பகவத் கீதை பாடத்திட்டமும் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பான அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " பொறியியல் மாணவர்களின் மூன்றாவது செமஸ்டரில் தத்துவவியல் பாடம் இடம்பெறும். சென்னையில் உள்ள எம்.ஐ.டி, சிஇஜி, ஏசிடி, எஸ்.ஏ.பி வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு முதல் தத்துவவியல் படிப்பு அறிமுகமாக உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும அறிவுறுத்தலின்படி இந்த பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது " என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


 

பொறியியல் படிப்பில் பகவத் கீதை சேர்க்கப்பட்டிருப்பதுதான் கல்வி வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளாதால் அந்த பிரிவை கட்டாயப் பாடத்திட்டத்தில் இருந்து விருப்ப பாடமாக மாற்றியிருக்கிறார்கள். ஆனாலும், கல்வியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என தொடர்ந்து அந்த பாடத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக அவர்கள் பேசும்போது, "  இது ஒரு தேவையில்லாத முயற்சி, எந்த நோக்கத்தை செயல்படுத்த இந்த மாதிரியான பாடத்திட்டங்களை கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மாணவர்கள் பள்ளிப்பருவத்தில் ஆரம்பித்து மேல்நிலை பள்ளி வரை அனைத்து மதம் சம்பந்தமாக பாடத்திட்டங்களையும் படிக்கிறார்கள். அதில் உள்ள நன்னெறிகளை அவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் பல ஆண்டுகளாகவே பள்ளிக் கல்வித்துறை அதனை செயல்படுத்தி வருகிறது. கல்லூரிகளில் கூட தமிழை முதன்மை பாடத்திட்டமாக படிக்கும் பிரிவுகளில் இந்த நடைமுறை இதுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் எந்த குறிப்பிட்ட மதத்தை முன்னிலைபடுத்தும் விதமான கருத்துக்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

அதன் காரணமாக இந்த நடைமுறையில் இதுவரையில் எந்த சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இதனை முழுவதும் அழிக்கும் விதமாக இந்து மதத்தின் அடிப்படை நூலாக சொல்லப்படும் பகவத் கீதையை கட்டாயப்பாடமாக படிக்க வேண்டும் என்றால், அதில் எவ்வளவு பெரிய அரசியல் சூழ்ச்சி இருக்கிறது என்பதை நம்மால் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
மத சார்ப்பற்ற நாடாக, சமூகமாக நாம் இருக்கிறோம் என்று சொல்லும் கல்வித்துறை, இந்து மதத்தை தவிர இஸ்லாம், கிருஸ்துவம், புத்த மதங்களை பற்றிய பாடத்திட்டங்களை அதில் சேர்க்காமல் மற்ற மதங்களை சிறுமைப்படுத்தும் வகையில் இத்தகைய முயற்சியில் ஈடுபடுவதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். மொழியை திணிக்க பார்த்து தோற்று போனவர்கள் தேர்ந்தெடுத்துள்ள குறுக்கு வழியாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. இது நாளைக்கு தொடக்க கல்வியிலும் எதிரொலிக்கும். அப்போது இது விஸ்வரூப பிரச்சனையாக மாறும்" என்றார்.




இந்த சர்ச்சைகள் ஒருபுறம் என்றால் பொறியியல் பாடப்பிரிவுகளில் காலங்காலமாக இருந்துவரும் சில பாடப்பிரிவுகளை தவிர, தற்போது புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக கல்வியாளர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள். அந்த வகையில் என்னென்ன பாடத்திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை காணலாம். அதில் மெக்கானிக், மின்னியல், சிவில், கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளை தவிர டைரி டெக்னாலஜி, ரப்பர் டெக்னாலஜி, ஜெனடிக் இன்ஜினியரிங், செராமிக் இன்ஜினியரிங், பாலிமர் இன்ஜினியரிங், கிராபிக்ஸ் இன்ஜினியரிங் என புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பாடத்திட்டங்களில் எல்லாம் அறிவியலும், விஞ்ஞானமும் மட்டுமே இருக்கிறதே அன்றி எந்தவிதமான மதம் சம்பந்தமான கருத்துக்களும் அதில் இதுவரை இடம்பெறவில்லை என்பதே தற்போதைய நிலை. அவ்வாறு தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது

கருத்துகள் இல்லை: