வெள்ளி, 27 செப்டம்பர், 2019

டீபேக்ஸ்: தினமும் பிளாஸ்டிக்கை குடிக்கிறோமா... பிளாஸ்டிக் ஆபத்து ....

மின்னம்பலம் :
டீபேக்ஸ்: தினமும் பிளாஸ்டிக்கை குடிக்கிறோமா?
தேயிலையைச் சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயாரிக்கப்படுகிறது. இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாரம் இறங்கி தேநீர் தயாராகிறது.
இந்த டீ பேக்குகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது? அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா? என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாம் அதனை உட்கொள்கிறோம். இந்நிலையில், ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், டீ பேக் பயன்படுத்தி தேநீர் தயாரிக்கும் போது, பில்லியன் கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் தேநீரில் இறங்கும் என்பது தெரியவந்திருக்கிறது.
கனடாவின் McGill University ஆராய்ச்சியாளர்கள், ஒரு கப் கொதிக்கும் நீரில் (95 சி) மூழ்கும்போது, 11.6 பில்லியன் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் 3.1 பில்லியன் சிறிய நானோபிளாஸ்டிக் துகள்களை டீ பேக் கோப்பையில் வெளியிடுகிறது என்று தெரிவித்துள்ளனர். ஒரு ஆண்டு முழுவதும் ஒரு நபர் உட்கொள்ளும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்களின் அளவை விட இந்த அளவு கணிசமாக அதிகமாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஆய்வொன்றின் படி, சராசரி நபர் ஆண்டுதோறும் குறைந்தது 50,000 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உணவுகள் மூலம் தெரியாமல் உட்கொள்வது தெரியவந்துள்ளது.

எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் மற்றும் ஸ்பெக்ட்ரோஸ்கோபி ஆகியவற்றால் பகுப்பாய்வு செய்யப்படுவதற்கு முன்னர், மான்ட்ரியல் நகரில் உள்ள கடைகள் மற்றும் கஃபேக்களிலிருந்து நான்கு வகையான பிளாஸ்டிக் டீ பேக்குகளை ஆராய்ச்சியாளர்கள் சோதித்திருக்கின்றனர். இது பிற உணவு வகைகளைக் காட்டிலும், ஒரு டீ பேக் மட்டும் 11.6 பில்லியனுக்கும் அதிகமான மைக்ரோபிளாஸ்டிக்ஸை வெளியிட்டது தெரியவந்திருக்கிறது.
பெரும்பாலான டீ பேக்குகள் இயற்கை இழைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, இருப்பினும் இயற்கை இழைகளைப் பயன்படுத்தும் பல பிராண்ட் நிறுவனங்கள் பைகளை மூடுவதற்கு பிளாஸ்டிக்கை பயன்படுத்துகின்றன. இந்த பிஸாஸ்டிக் பேக்குகளைத்தான் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். இந்த டீ பேக்குகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை உட்கொள்வதன் மூலம் நாம் பிளாஸ்டிக்கையும் நம்மை அறியாமலே எடுத்துக்கொள்கிறோம். இதனால் உடல் நலனுக்குத் தீங்கு ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
காற்று, மண், ஆறுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆழமான பெருங்கடல்களிலும், பாட்டில் நீர், கடல் உணவு மற்றும் பீர் ஆகியவற்றிலும் மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் கண்டறியும் ஆராய்ச்சியாளர்கள் கடந்த அக்டோபரில் முதல் முறையாக மனித மல மாதிரிகளிலும் மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் கண்டறிந்ததாக அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: