வியாழன், 1 ஆகஸ்ட், 2019

கோவை சிறுமியை பலாத்காரம் செய்தவனுக்கு தூக்கு..உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

tamilnadu coimbatore child issue delhi supreme court judgmenttamilnadu coimbatore child issue delhi supreme court judgmentnakkheeran.in - nagendran : முஸ்கின், ரித்திக் என்ற இந்த 2 பெயர்களை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்த பிஞ்சுக் குழந்தைகள் பி.ஏ.பி வாய்க்காலில் சடலமாக மிதந்து கிடந்த காட்சியை கண்டு, அப்போது தமிழகமே கண்ணீர் சிந்தியது. கோவை சேர்ந்த ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயினின் மகள் தான் முஸ்கின் (வயது11), அவளது தம்பி ரித்திக்(வயது8) ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். கடந்த 2010-ஆம் ஆண்டு அக்.29ம் தேதி காலை வாடகை வேனில் பள்ளிக்குச் செல்ல வீட்டருகே காத்திருந்தனர். அவர்களை வேனில் கடத்திச் சென்ற மோகனகிருஷ்ணனும், அவனது கூட்டாளியான மனோகரனும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தனர். சிறுவன் ரித்திக்கின் வாயில் சாணிப்பொடி கலந்த தண்ணீரை ஊற்றி கொலை செய்துள்ளனர். 
பின்னர் சிறுமி முஸ்கானையும் கொலை செய்த அவர்கள், 2 பேரின் சடலத்தையும் பி.ஏ.பி வாய்க்காலில் வீசிவிட்டு தப்பினார். இதற்கிடையே, 2 சிறுவர்களையும் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரணையை துவக்கினர். அதற்குள், வாய்க்காலில் 2 பேரின் சடலங்கள் கிடப்பது தெரியவந்தது. தமிழக மக்களை அதிரவைத்த இக்கொலை வழக்கில் பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவர் மோகன் (எ) மோகனகிருஷ்ணன், அவனது கூட்டாளியான டிராக்டர் டிரைவர் மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிறுமி பிரேத பரிசோதனை  அறிக்கையில், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. அப்போதைய கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த சைலேந்திரபாபு, இந்த வழக்கில் தனிக் கவனம் எடுத்து விசாரணை நடத்தினார்.

 முக்கிய குற்றவாளியான மோகன கிருஷ்ணனை காவலில் எடுத்து விசாரிக்கும்போது, போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் 'என்கவுன்டரில்' சுட்டுக்கொல்லப்பட்டான். ஒரு வாரத்திலேயே குற்றவாளிக்கு முடிவுரை எழுதிய காவல்துறைக்கு அப்போது பாராட்டுக்கள் குவிந்தன. மற்றொரு குற்றவாளியான மனோகரன் மீதான வழக்கில் 45 நாளில் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். வழக்கு முடிந்து ஓராண்டிலேயே அதாவது 2012-நவ.07-ந்தேதி மனோகரனுக்கு ஒரு தூக்கும், 3 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், மனோகரனின் தூக்கை இன்று உறுதி செய்திருக்கிறது. குழந்தைகள் மீது வக்கிரம் கொள்பவர்களுக்கும் அவர்களை போகப் பொருளாக பார்ப்பவர்களுக்கும் மனோகரனின் மரணம் எச்சரிக்கையாக இருக்கட்டும். முஸ்கான், ரித்திக் ஆகியோர் ஆன்மா சாந்தியடையட்டும்.!

கருத்துகள் இல்லை: