வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

நடிகர் விஷால் விரைவில் கைது? வருமானவரி வழக்கு ... பிணையில் வெளிவரமுடியாத அழைப்பாணை

நடிகர் விஷால் விரைவில் கைது?மின்னம்பலம் : வருமான வரித்துறை வழக்கினால் நடிகர் விஷாலுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சென்னையில் இயங்கிவருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் சம்பளத்தை வழக்கமாக அனைத்து நிறுவனங்களிலும் பின்பற்றப்படும் வரிப் பிடித்தம் செய்துள்ளது. ஆனால், அவ்வாறு பிடித்தம் செய்த டிடிஎஸ் வரித்தொகையை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனரான விஷால் குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை.

இது குறித்து வருமான வரித்துறை விஷாலுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், விஷால் எந்த நோட்டீசுக்கும் பதில் அளிக்கவில்லை. இதனால் வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர் மதி, இதுதொடர்பாக விஷால், வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி, அதாவது இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் நடிகர் விஷால் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதனால், விஷாலுக்கு ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது நீதிமன்றம். இதனால் நடிகர் விஷால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகிவருகின்றன.

கருத்துகள் இல்லை: