சனி, 22 ஜூன், 2019

அதிமுகவை முழுவதுமாக விழுங்க பாஜக தயார் .. ஓபிஎஸ் தலைமையில் உள்ளாட்சி தேர்தலுக்கு

tamiloneindia : ஓபிஎஸ் தலைமையில் உள்ளாட்சி தேர்தல்... பலப்பரீட்சைக்கு பாஜக ரெடி.. எடப்பாடி அணிக்கு செம டோஸ்!*
சென்னை: அதிமுகவை ஆட்டுவிக்கும் பாஜக தலைமையின் 'கோலாட்ட'ங்கள் தொடருகின்றன. அதிமுகவை ஓபிஎஸ் வசம் கொடுத்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாஜக வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை வைத்திருக்கும் அதிமுகவை அவ்வளவு எளிதாக கை கழுவ பாஜக தயாராக இல்லை. ஜெயலலிதா இல்லாத அதிமுகவை இப்போது முழுமையாக பாஜக தன் வசமாக்கிக் கொண்டது.
தற்போதைய இரட்டைத் தலைமையை முன்வைத்து லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. இந்த தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் தோல்வி ஏன் என ஆராயத் தொடங்கியது.
ஆய்வு அறிக்கைகள்
அதுபோதாது என தங்களது விசுவாசத்துக்குரிய ஓபிஎஸ்-ன் கருத்துகளையும் கேட்டது பாஜக. உளவுத்துறையும் விரிவான அறிக்கையை கொடுத்தது. தமிழக பாஜகவும் தம் பங்குக்கு போட்டுக் கொடுத்தது.
*எடப்பாடி அணி மீது கோபம்*
அத்தனை கைகளுமே 'எடப்பாடி அணியின் உள்ளடி' வேலையைத் தவிர வேறு எதுவுமே இல்லை ஒரே போடாக கை நீட்டிவிட்டன. இதனால் எடப்பாடி தரப்பு மீது மிக உச்சகட்ட கோபத்தில் இருக்கிறது பாஜக தலைமை.
*அமைச்சர்களின் டெல்லி பயணம்*

இதற்காகவே மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை எடப்பாடி அணி அமைச்சர்கள் சந்தித்து பேசியிருக்கின்றனர். ஆனால் அத்தனை பாஜக தலைவர்களும் உங்களது அணியின் துரோகத்தால்தான் இப்படி ஒரு கேவலமான தோல்வி என அந்த அமைச்சர்களை வறுத்தெடுத்துவிட்டனர்.
*இனி ஓபிஎஸ்தான் அதிமுக*
எப்படியும் சமாதானம் பேசிவிடுவோம் என எடப்பாடி அணி தரப்பு போராடியிருக்கிறது. அப்போது பாஜக மேலிடம் தெளிவான தகவலை சொல்லி அனுப்பிவிட்டது; ஆட்சியில் நீங்கள் நீடிக்கலாம்; ஆனால் கட்சி பொதுச்செயலர் இனி ஓபிஎஸ்தான். அவர் கட்சியை பலப்படுத்தட்டும். அவரது தலைமையில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம். அப்போதும் இதே வேலையை காட்டினால் விளைவுகளை புரிந்து கொள்ளுங்கள் என பகிரங்கமாக எச்சரிக்கப்பட்டதாம்.
*விளைவுகள் மோசம்*
அப்படியான எச்சரிக்கை எது என்பதையும் நேரடியாக வெளிப்படுத்தியிருக்கிறது பாஜக மேலிடம். 30,40 பைல்களை காட்டி இத்தனையும் உங்களுடையது; விளைவுகளை எதிர்கொள்ள தயாராகிவிடுங்கள் என மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறதாம். டெல்லியின் இந்த கடும்கோபத்தால் எடப்பாடி தரப்பு கிலியில் உறைந்துள்ளதாம்.

கருத்துகள் இல்லை: