வியாழன், 20 ஜூன், 2019

2020ல் சென்னையில் நிலத்தடி நீர் இருக்காது,, நிதி அயோக் ஆய்வு

தினமலர் :புதுடில்லி : 2020 ம் ஆண்டில் டில்லி,
சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போகும் என நிடி ஆயோக் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் குறித்த ஆய்வு அறிக்கையை நிடி ஆயோக் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, 2020ல் டில்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 21 இந்திய நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் வறண்டு போகும் நிலை ஏற்படும்.
இதனால் 100 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். 2030 ல் ஏறக்குறைய இந்தியாவின் 40 சதவீதம் மக்களுக்கு குடிநீரே இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம். இந்த அபாய நிலையை எச்சரிப்பதற்கான சூழல் 2020 ம் ஆண்டிலேயே துவங்கும். சென்னையில் உள்ள 3 நதிகள், 4 நீர் ஆதாரங்கள், 5 நீர்நிலைகள், 6 வனப்பகுதிகள் முற்றிலும் வறண்டு போகும்.
இருப்பினும் மற்ற மெட்ரோ நகரங்களில் நீர்நிலையில் போதிய அளவிலும், மழையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய நீர்வள கழக முன்னாள் இயக்குனர் மனோகரன் குஷலானி கூறுகையில், கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் இதற்கு அதிக செலாகும். அத்துடன், புவியில் குறிப்பிட்ட அளவே நீர் உள்ளது.

கடல்நீரை குடிநீராக்கினால் கடல்கள் வற்றிவிடும் என்பதை இவர்கள் மறந்து விட்டனர்.
நமது குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் நாம் எதை விட்டு செல்ல போகிறோம்? நம்மிடம் ஏராளமான பணம் இருக்கலாம். ஆனால் நமது குழந்தைகள் தாகம் எடுத்தால் தண்ணீருக்கு பதில் பணத்தை குடிக்க முடியாது. கடல்நீரை குடிநீராக்குவது தீர்வாகாது. அதற்கு பதில், நீரை பாதுகாக்க வேண்டும். இது நாட்டு மக்கள், அரசு ஒட்டுமொத்தமாக பொறுப்பெடுத்து செய்ய வேண்டும். தண்ணீரை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். மழைநீரை சேகரிப்பது ஒன்றும் கஷ்டமானதோ அல்லது அதிக செலவாகக் கூடியதோ அல்ல. நமது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு இதனை நாம் செய்தாக வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: