சனி, 22 ஜூன், 2019

நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி நாளை நடத்த வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு .. பதிவாளர் நடவடிக்கைக்கு இடைக்கால தடை

தினத்தந்தி : தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி 23-ந் தேதி (நாளை) நடத்த வேண்டும் என்றும், இந்த தேர்தலை நிறுத்தி வைத்து சங்க பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவை பிறப்பித்தது.
சென்னை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியினரும், நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியினரும் மோதுகின்றனர். இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நாளை நடைபெற இருந்த நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது விஷால் சார்பில் மூத்த வக்கீல் ஓம்பிரகாஷ் ஆஜராகி வாதாடுகையில் கூறியதாவது:-
தொழில்முறை ஆயுட்கால உறுப்பினர்கள், தொழில்முறை ஆண்டு சந்தா உறுப்பினர்கள் ஆகியோருக்கு மட்டுமே வாக்குரிமை உள்ளது. தொழில்முறை அல்லாத ஆயுட்கால உறுப்பினர்கள், தொழில்முறை அல்லாத ஆண்டு சந்தா உறுப்பினர்களுக்கு வாக்குரிமை கிடையாது.

சுயவிவர பட்டியலை வழங்காத 44 உறுப்பினர்களை தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாகவும், ஆண்டு சந்தா செலுத்தாத 6 பேரை சங்கத்தில் இருந்து நீக்கியும் 2017-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் குளறுபடி எதுவும் இல்லை. ஆனால், இதை காரணம் கூறி, தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரமே கிடையாது. அவருக்கு, சங்கத்தின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் மட்டுமே உள்ளது. அவருக்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் தகுதி பட்டியல் குறித்து விசாரிக்க அதிகாரம் இல்லை. புகார் கொடுத்துள்ள 61 பேரும் ஒரே மாதிரியான புகாரை அளித்துள்ளனர். இதில் யாருடைய பின்னணியோ உள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு அதில் யாரும் தலையிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் வாதாடுகையில், இந்த தேர்தலை நிறுத்திவைப்பதற்கு முன்பாக விஷால் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், மாவட்ட பதிவாளருக்கு தேர்தலை நிறுத்த அதிகாரம் உள்ளது என்றும் கூறினார்.

அப்போது நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, “தேர்தலை நிறுத்துவதன் நோக்கம் என்ன? தேர்தலுக்காக சங்க நிதியில் இருந்து செலவு செய்து உள்ளனர். இந்த செலவினை அரசு ஏற்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரவிந்த் பாண்டியன், “உறுப்பினர்கள் பட்டியலில் குளறுபடி உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மனுதாரரிடம் கேட்டபோது, நீங்களே (பதிவாளரே) சரிபாருங்கள் என்று கூறிவிட்டார். எனவே, தேர்தலை நிறுத்தி வைத்து, உறுப்பினர் பட்டியல் சரிபார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு பின்னர் உறுப்பினர் மற்றும் தகுதி வாய்ந்த வாக்காளர்களை ஆய்வு செய்வதால் எந்த பயனும் இல்லை” என்று பதில் அளித்தார்.

இதையடுத்து நீதிபதி, “தேர்தல் வாக்குப்பதிவு திட்டமிட்ட படி 23-ந் தேதி (நாளை) நடைபெறட்டும். வாக்கு எண்ணுவது, முடிவை அறிவிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யலாம்” என்றார்.

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் வாதாடுகையில், “ஒருவேளை வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது என்று இந்த ஐகோர்ட்டு முடிவு செய்யும்போது, தேர்தலையே ரத்து செய்ய வேண்டியது இருக்கும். அப்போது தேவையில்லாமல் மீண்டும் ஒரு தேர்தலை நடத்த வேண்டியது வரும். அந்த தேர்தல் பணிக்கும் செலவு செய்ய வேண்டியது இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்தல் எந்த இடத்தில் நடைபெற போகிறது என்றே இன்னும் முடிவாகவில்லை. தேர்தல் எங்கு நடைபெற போகிறது என்று தெரியாமல் உறுப்பினர்கள் எப்படி ஓட்டு போட வருவார்கள்? எனவே, தேர்தலை தள்ளிவைப்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை” என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பி.டி.ஆதிகேசவலு நேற்று இரவு சுமார் 9.40 மணிக்கு பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறேன். இந்த தேர்தலை திட்டமிட்டபடி 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தவேண்டும். அதே நேரம், மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை, பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது. தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது. இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறி உள்ளார்.

எந்த இடத்தில் தேர்தல்? - இந்த உத்தரவு பற்றி நடிகர் சங்கம் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், ஏற்கனவே திட்டமிட்டபடி 23-ந் தேதி (நாளை) நடைபெறும். தேர்தலுக்கான ஓட்டுச் சீட்டுகள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்த அனுமதி இல்லாததால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானம் அல்லது மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளி வளாகம் ஆகிய இரு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் தேர்தல் நடைபெறும். இதில் எந்த இடத்தில் தேர்தலை நடத்துவது என்பது பற்றி சனிக்கிழமை (இன்று) முடிவு செய்யப்படும்.

இவ்வாறு நடிகர் சங்கம் தரப்பில் கூறப்பட்டது

கருத்துகள் இல்லை: